‘ஈகிள்’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் பொங்கல் விடுமுறைக்கு வெளியான படங்களுக்குள் கடும் போட்டி நிலவியது. முதலில் ‘குண்டூர் காரம்’, ‘ஹனுமான்’, ‘சைந்தவ்’, ‘ஈகிள்’ மற்றும் ‘நா சாமி ரங்கா’ உள்ளிட்ட படங்கள் திட்டமிடப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்காததால் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் ‘ஈகிள்’ படம் மட்டுமே வெளியீட்டில் பின்வாங்கியது. அதிலும், தாங்கள் தனி வெளியீடாக இருந்தால் மட்டுமே பின் வாங்குவோம் என்ற கோரிக்கையும் வைத்தது படக்குழு. இதற்கு தயாரிப்பாளர் சங்கம் சம்மதம் தெரிவித்தது.
பிப்ரவரி 9-ம் தேதி ‘ஈகிள்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதே தேதியில் ‘ஊரு பேரு பைரவக்கோனா’, ‘யாத்ரா 2’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ஈகிள்’ படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்கள்.
இதை வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ‘ஊரு பேரும் பைரவக்கோனா’ திரைப்படம் தங்களது வெளியீட்டை பிப்ரவரி 16-ம் தேதி மாற்றி வைத்தது. இதனால் ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈகிள்’ திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதன் மூலம் ‘ஈகிள்’ படத்தின் வெளியீட்டில் நிலவி வந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.