முன்னணி சண்டைக் காட்சிகளின் இயக்குநரான திலீப் சுப்பராயன் படமொன்றை இயக்கவுள்ளார்.
’ஆரண்ய காண்டம்’ படத்தின் சண்டைக் காட்சிகளின் மூலம் அறியப்பட்டவர் திலீப் சுப்பராயன். அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வந்தார். ‘விக்ரம் வேதா’, ‘இரும்புத்திரை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘வடசென்னை’, ‘விஸ்வாசம்’, ‘காப்பான்’, ‘கர்ணம்’, ‘வலிமை’, ‘சர்தார்’ உள்ளிட்ட பல படங்களின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தது இவர் தான்.
சண்டைக் காட்சிகளை வடிவமைத்தது மட்டுமன்றி தயாரிப்பாளராக ’அஞ்சல’, நடிகராக ‘சங்கு சக்கரம்’ ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது தனது இயக்குநராகவும் அறிமுகமாக முடிவெடுத்துள்ளார் திலீப் சுப்பராயன்.
இதற்காக கதையொன்றை எழுதி, அதன் இறுதிவடிவத்தை உருவாக்கி வருகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
சண்டைக் காட்சிகளில் பணிபுரியும் முன்பு, புஷ்கர் – காயத்ரியிடம் உதவி இயக்குநராக ‘ஓரம் போ’ படத்தில் பணிபுரிந்தவர் திலீப் சுப்பராயன் என்பது நினைவுக் கூரத்தக்கது. மேலும், ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் சண்டைக் காட்சிகளில் வடிவமைத்ததோடு மட்டுமன்றி முதன்மை உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.