தனுஷ் பணிபுரியும் வேகத்தினைப் பார்த்து திரையுலகினர் பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘ராயன்’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 50-வது படமாகும். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘ராயன்’ முடிந்த கையோடு, அவருடைய தயாரிப்பில் அவரே இயக்கி வரும் படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இதில் பாவிஷ், அனைகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் பாடல் காட்சியொன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்குப் பிறகு இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. ‘ராயன்’ மற்றும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய இரண்டு படங்களின் பணிகளுக்கு இடையே சேகர் கம்முலா படத்தினை துவங்கினார் தனுஷ்.
‘குபேரா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சுமார் 50% வரை முடித்துவிட்டார்கள். இதனை முடித்துவிட்டு விரைவில் தனது அடுத்த படம் குறித்து முடிவெடுப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
‘ராயன்’ விளம்பரப்படுத்தும் பணி, ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு வேலைகள், ‘குபேரா’ படப்பிடிப்பு என தனுஷ் மும்முரமாக பணியாற்றி வருவதை திரையுலகினர் மிகவும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.