ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம்’

‘லாக்கப், க.பெ.ரணசிங்கம், மதில், ஒரு பக்கக் கதை, மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம்‘ உள்ளிட்ட படங்களை  நேரடியாக தன்னுடைய ஓடிடி தளத்தில் வெளியிட்ட நிறுவனம் ஜீ 5.

அடுத்து “சித்திரைச் செவ்வானம்” என்ற படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. பிரபல ஸ்டன்ட் மாஸ்டரான சில்வா இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்னி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். பூஜா கண்ணன், நடிகை சாய் பல்லவியின் தங்கை, இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இயக்குனர் விஜய் தயாரித்து எழுதியுள்ள படம் இது. ஏஎல் அழகப்பன், மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.

சாம் CS இசையமைக்க, பிரவீன் KL படத்தொகுப்பாளராகவும்,  ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும்  K.G.வெங்கடேஷ் பணிபுரிந்துள்ளனர்.

படம் பற்றி சமுத்திரக்கனி கூறுகையில்,

‘சித்திரைச் செவ்வானம்’ ஒரு அழகான திரைப்படம். என் தம்பி ஃபைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒருநாள் வந்து, என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு அப்பா,  பொண்ணு இருவருக்குமிடையிலான உணர்வுப்பூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கை பயணம், அதில் நடக்கும் பிரச்சனைகள் தான் கதை. இப்படி மனதை உருக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையை, என் தம்பி சொல்வார் என நான் சுத்தமாக எதிர்பார்க்கவேயில்லை. கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஷூட்டிங் போகலாம் என்றேன். மிக அற்புதமான படமாக உருவாக்கிவிட்டார். இம்மாதிரியான ஒரு மிகச்சிறந்த படத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு சில்வாவுக்கு நன்றி. இது நம் சமூகத்திற்கு அவசியமான திரைப்படம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக இருக்கும்.

படத்தின் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா கூறியதாவது,

இயக்குநர் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார், அட்டகாசமாக இருந்தது. இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக்கதையை இயக்கலாம் என்று தோன்றியது. உடனடியாக அந்த கதையை நிறைய மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றினோம். பின் சமுத்திரகனியிடம் இந்தக் கதையை சொன்னேன். சொன்ன மறுநொடியே ‘தம்பி சூப்பரா இருக்கு எப்ப ஷுட்டிங் போகலாம்’ என்று கேட்டார். அப்படி உருவானது தான் ‘சித்திரைச் செவ்வானம்' திரைப்படம். 

நான் ஃபைட் மாஸ்டர் என்பதால் இது ஆக்சன் படம் என்று நினைத்து விடாதீர்கள், நெஞ்சைத் தொடுவது போன்ற உணர்வு பூர்வமான படம் தான் இது. ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பான உறவு தான் கதை.  சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல், அதை அவர்கள் கடப்பது தான் கதை. இந்தப் படத்தின் முக்கியமான மகள் பாத்திரத்திற்கு நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சரியாக இருப்பார் என இயக்குநர் விஜய் கூறினார். எங்களுக்கும் அவர் பாத்திரத்தில் சரியாக பொருந்துவார் எனத் தோன்றியது. மிக அற்புதமாக மகள் பாத்திரத்தை செய்து அசத்திவிட்டார். படத்தில் இன்னொரு முக்கியமான பாத்திரத்தை, கேரளாவில் புகழ்பெற்ற நடிகையான ரீமா கலிங்கல் செய்திருக்கிறார். 

நானும் இயக்குநர் விஜய்யும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறோம். நினைத்ததை விட மிக அழகான திரைப்படமாக வந்திருக்கிறது. தற்போது ZEE 5 தளத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி வெளிவருகிறது. எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இப்படம் இருக்கும். அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை ரீமா கலிங்கல் கூறுகையில்,

முதலில் மாஸ்டர் சில்வாவும், இயக்குநர் விஜய்யும், 'சித்திரைச் செவ்வானம்' படத்திற்காக என்னை அணுகி, போலீஸ் பாத்திரம் என்று சொன்ன போது, நானும் இதை ஒரு ஆக்சன் திரில்லர் படம் என்று தான் நினைத்தேன். அப்பா மகளுக்கான ஆழமான உணர்வை சொல்லும் கதையைச் சொல்லி, என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார் மாஸ்டர். தமிழ் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடுவதைக் காண பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இயக்குநராக தன் திரைப்பயணத்தை துவங்கும் ஸ்டண்ட் சில்வா சாருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக வாழ்த்துக்கள். 

இப்படத்தின் தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான விஜய் கூறியதாவது,

டிசம்பர் 3 ஆம் தேதி ZEE 5 ஒடிடி தளத்தில் சித்திரைச் செவ்வானம் வெளியாகிறது.  இந்தத் திரைப்படம் எங்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான படைப்பு.  2014 ல் எனக்கு தோன்றிய ஒரு சிறு ஐடியாவை ஒரு கதையாக எழுதி வைத்திருந்தேன். 

2020 பொதுமுடக்க காலத்தில் நானும் சில்வா மாஸ்டரும் பேசிக்கொண்டிருந்த போது, இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களே இயக்குங்கள் என்று சொன்னேன். ஒரு ஆக்சன் இயக்குநர் என்றால் ஆக்ஷனில் மட்டும் தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று அனைவரும் நினைத்துக் கொள்வார்கள், ஆனால் சில்வா மாஸ்டர் மிகவும் எமோஷலானவர், அவருக்குள் ஒரு மென்மையான பக்கம் இருக்கிறது. மிகவும் எளிய சுபாவம் கொண்டவர், நிறைய பேருக்கு உதபுபவர். அவர் இந்தக் கதையை மிகச் சரியாகக் கையாளுவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் இந்தப்படத்தை நீங்கள் இயக்குங்கள் என்று சொன்னேன், அவரும் ஒப்புக்கொண்டார். 

அவருடன் இணைந்து இப்படத்தை செய்தது, எனது கடமையாகத்தான் நினைக்கிறேன். சில்வா மாஸ்டர் எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். இப்படம் உருவானதற்கு முழுக்காரணம் அவர் தான். அடுத்ததாக சமுத்திரக்கனி சார். அவர் தான் இப்படத்தின் உயிர். நாங்கள் கேட்டவுடன் ஒப்புக்கொண்டு, தன்னுடைய சொந்தப்படம் போல் அர்ப்பணிப்புடன் செய்து தந்தார், அவருக்கு நன்றி. 

முக்கியமான பாத்திரத்தில் சாய்பல்லவி தங்கை பூஜா கண்ணன் நடித்திருக்கிறார். ஒரு பிரபலத்தின் தங்கை என்றில்லாமல், நடிப்புக்காக தனியே பயிற்சி எடுத்துக் கொண்டு நடிக்க வந்திருக்கிறார். மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார். அதே போல் நாங்கள் கேட்டவுடன்  ஒப்புக்கொண்டு ரீமா கல்லிங்கல் மிக முக்கியமான பாத்திரத்தைச் செய்துள்ளார். எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை வெளியிடும் ZEE 5 நிறுவனத்திற்கு மிகப்பெரும் நன்றி, அவர்களுடன் இணைவது எங்களுக்கு பெருமிதம்.

 ‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3 அன்று நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
 

Read Previous

கொரானோ தொற்று, மருத்துவமனை சிகிச்சையில் கமல்ஹாசன்

Read Next

ஜெய் பீம் – சூர்யா, இயக்குனர் ஞானவேலைப் பாராட்டிய நல்லக்கண்ணு