’ப்ளடி பெக்கர்’ படம் உரிமையில் விற்பனையில் சிக்கலில் மாட்டியிருக்கிறது. இதனால் இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னணி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் ‘ப்ளடி பெக்கர்’. இதன் பணிகள் அனைத்துமே முடிவுற்று, வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதனை நெல்சனிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். கவின் நாயகனாக நடித்துள்ளார்.
‘ஜெயிலர்’ இயக்குநர் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் என்பதால் உரிமைகள் அனைத்தும் உடனே விற்றுவிடும் என நினைத்தார்கள். ஆனால், உரிமைகள் விற்பனை ஆரம்பித்தவுடன், பலரும் மிகவும் குறைந்த விலைக்கே கேட்டுள்ளார்கள். மேலும், இதன் ஓடிடி உரிமையினை வாங்க ஆளில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கிக் கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம். மேலும், ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை உள்ளிட்ட அனைத்தையும் விற்றதால் தான் வெளியீடு என்பதில் உறுதியோடு இருக்கிறது.