ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை இந்தாண்டுக்குள் முடித்து வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
சிவகார்த்திகேயன் படத்தினை முடித்துவிட்டு, சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தினை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது. பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளார் சஜித் நாடியவாலா.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை. எந்தமாதிரியான கதைகளம் என்பதை எல்லாம் அல்லு அர்ஜுனிடம் தெரிவித்துவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.
சிவகார்த்திகேயன், சல்மான்கான் ஆகியோர் படங்களை முடித்துவிட்டு வரும்போது, அல்லு அர்ஜுன் தேதிகள் கிடைக்கும் பட்சத்தில் இந்தப் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.