அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பது இனி வரும் நாட்களில் முடிவாகும் எனத் தெரிகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் மற்றும் நடிகர்கள் ஒப்பந்தம் ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், படப்பிடிப்பு தேதிகள் முடிவான பிறகே ஒப்பந்தம் போட முடியும் எனத் தெரிகிறது. ஏனென்றால் இன்னும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடியவில்லை. அதனை முடித்துவிட்டு, சில நாட்கள் ஓய்விற்கு பிறகே ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளார் அஜித்.
இதனால் ஜூனில் படப்பிடிப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. அந்த நேரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் தேதிகளும் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே, அஜித் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணி இருக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு படங்களுக்கு தேதிகள் கொடுத்துவிட்டதால், எஸ்.ஜே.சூர்யாவும் அஜித் படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார்.
வரும் நாட்களில் என்ன நடக்கிறதோ அது பொருத்தே ’குட் பேட் அக்லி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறாரா, இல்லையா என்பது முடிவாகும். ‘வாலி’ கூட்டணி என்பதால் இதுவே ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பாக அமையும் என்பது உறுதி.