‘காக்கா முட்டை’ படக் குழுவினருக்கு லொயோலா கல்லூரி பாராட்டு

சென்னை லொயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் துறையின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா, தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படக்குழுவினருக்கு விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு பகிர்வரங்கம் இன்று பிற்பகல் 3 மணியளவில் கல்லூரியில் உள்ள ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன், கதையின் நாயகி நடிகை ஐஷ்வர்யா, பெரிய, சிறிய காக்கா முட்டைகள் ரமேஷ், விக்னேஷ் மற்றும் பாட்டி சாந்திமணி ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். தயாரிப்பாளர்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் அவர்களின் சார்பாக இயக்குநர் மணிகண்டன் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

துறையின் பத்தாவது ஆண்டு விழா என்பதால் பத்து விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன.

கல்லூரி முதல்வரின் பிறந்த நாளும் ஜூலை பத்து என்பதால் அவருக்கும் இன்ப அதிர்ச்சியாக வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

முதுகலை ஊடகக் கலையில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் இப்படிப்பிற்காக விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்று துறைத்தலைவர் குறிப்பிட்டார்.

அருட்தந்தை ஜோசஃப் ஆண்டனி சாமி, முதல்வர், லொயோலா கல்லூரி ஆற்றிய வாழ்த்துரையில்,

“நான் கீழே உட்கார்ந்திருக்கும்பொழுது, சிறிய காக்கா முட்டையுடன் பேசிக்கொண்டிருந்தேன். ‘நான் பள்ளிக்கூட பரீட்சையில் கூட ஐம்பது மார்க்கு தாண்டினதில்ல. விகடன் எங்களுக்கு அறுபது மார்க் கொடுத்திருக்காங்க,” என்றார். இது போன்ற படைப்புகளை தரும் படைப்பாளிகளை வாழ்த்துகிறேன்.”

‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டன் பேசியதாவது,

“ஊடகக் கல்வி பயில ஆர்வம் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் டிப்ளோமா மட்டுமே படிக்க முடிந்தது. 2002ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து திரைப்படத் துறையில் நுழைய முயற்சிகள் எடுத்தேன். என்னுடைய கதைகளில் சூழலே வில்லனாக இருந்ததாலும், தனி கதாநாயகிகள் இல்லை என்பதாலும், கதை நன்றாக இருந்தாலும், அது வெகுஜனத்திற்கு எடுபடாது என்றுச் சொல்லி, கதையை மாற்றியமைக்க கேட்டுக்கொண்டனர். காதல் காட்சிகள் வேண்டும் என்று கேட்டனர். என்னுடைய கதைக்கு அது ஒவ்வாது என்று பதில் அளித்துவிட்டேன்.

மூன்றாவதாகச் சந்தித்த தயாரிப்பாளர்தான் வெற்றிமாறன். கதையில் எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், சமரசம் செய்யமாட்டேன் என்று கூறிய பின்னரே கதையை அவரிடம் விளக்கினேன். தயாரிப்பாளர்கள் இருவரும் திரைப்படத்தின் மீது கொண்ட காதல் காரணமாக விளைந்ததே இந்தப் படம். ஒரு திரைப்பட விழாவிலாவது இந்தப் படம் காட்சிப்படுத்தப்படுமென்றால் அது போதுமானது என்ற நிலையில் எடுக்கப்பட்டப் படம் இப்பொழுது ஒன்பது திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

‘நதிக்குள் விழுந்த கோடரி’ கதையைப் போன்றதே என் கதையும். மூன்றாவது முறை எனக்கு பெயர், புகழ், பணம் எல்லாமே சேர்த்துக் கிடைத்துவிட்டது. படத்திற்கான பட்ஜெட் நீங்கள் நினைப்பதைவிட அதிகமாகவே இருந்தது.

என்னுடைய அடுத்தப் படத்திற்கான பணி நடந்துகொண்டிருக்கிறது. எத்தனைப் படங்கள் இயக்கினாலும் நான் சார்ந்திருக்கும் மதிப்பீடுகளில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்பது எனது எண்ணம். ஊழல் நிறைந்த இந்தச் சமுதாயத்தில் எந்த ஊழலுக்கும் உட்படாது திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது ஆவல்.

‘காக்கா முட்டை’ சிறுவர்கள் இருவரும் படத்தில் பேசிய வசனங்களைப் பேசி பார்வையாளர்களின் கரகோஷங்களை அள்ளினர்.

Read Previous

Vasuvum Saravananum Onna Padichavanga – Official Teaser

Read Next

Wedding bells for ‘Unnaipol Oruvan’ star