விபிஎப் கட்டண விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் கடந்த ஒரு வார காலமாகவே பேச்சு வார்த்தை நடந்து வந்தது. அதில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இதனிடையே, விபிஎப் சேவையை வழங்கி வரும் முக்கிய நிறுவனமான க்யூப் நிறுவனம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் படங்களுக்கு 100 சதவீத சலுகை என அறிவித்தது.
அதைத் தொடர்ந்து அந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் இரண்டு வாரங்களுக்கு மட்டும் புதிய படங்களை வெளியிடுகிறோம் என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான்.
VPF சம்பந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPF ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது!
திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல.
பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.
அதே சமயம் VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ‘இரண்டாம் குத்து, தட்றோம் தூக்கறோம், பிஸ்கோத், மரிஜுவானா’ உள்ளிட்ட சில படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.