இசைஞானி தந்த இனிய வசந்தம்

SCREEN4SCREEN.COMக்கு நா.முத்துக்குமார் அளித்த சிறப்புப் பேட்டி

எட்டுத்திக்கும் இசைஞானியின் நீதானே பொன்வசந்தம் திரைப்படப் பாடல் காற்றில் கலந்து இனிய வசந்தமாய் வீசிக் கொண்டு இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசைஞானி இளையராஜாவின் கூட்டணியில் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் எதிர்பார்ப்பையும் மிஞ்சிய அளவில் ரசிகர்களை சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளவர் நா.முத்துக்குமார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு மிகப் பெரிய இசைக் கூட்டணியில் இணைந்து அவருக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பை  ஒரு பாக்கியமாக கருதுவதாக மனமுவந்து கூறுகிறார். நமக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்…

“எனக்கு கிடைச்ச ஒரு மிகப் பெரிய வாய்ப்பு இது. ஏன்னா கௌதம் மேனன் சாரோட தீவிர ரசிகன் நான். அவர் பாடல்களை கவிதை பூர்வமா எடுக்கக் கூடய மிகச் சிறந்த இளம் இயக்குனர்கள்ல அவரும் ஒருவர். காதல் பாடல்களை  காவியம் மாதிரியே பிக்சரைசேஷன் பண்ணுவாரு. அவ்ளோ க்யூட் இருக்கும்”.  

“ஏற்கெனவே அவரோட தயாரிப்புல ‘வெப்பம்’ படத்துல முழு பாடல்கள் எழுதியிருந்தேன். இப்ப ‘தங்க மீன்கள் ’ படத்துல முழு பாடல்கள் எழுதி இருக்கேன். அவரோட இயக்கத்துல ‘வாரணம் ஆயிரம்’ ப ஏத்தி ஏத்தி…. பாடல் எழுதி இருக்கேன். அவரோட இயக்கத்துல முதல் முறையா முழு பாடல்களை இந்த படத்துலதான் எழுதி இருககேன். அதுவும் இசைஞானியோட இசையிலங்கற போது இரு மடங்கு மகிழ்ச்சி”.

“இசைஞானிக்கு, பாலுமகேந்திரா இயக்கத்துல ‘ஜுலி கணபதி’ படத்துல ‘எனக்குப் பிடித்த பாடல்’….தான் முதல் முதல்ல எழுதினது. அதுக்குப் பிறகு கிட்டத்தட்ட 100 பாடல்கள் அவரோட இசையில  எழுதி இருப்பேன். முதல் முறையா ‘தோனி’ திரைப்படத்துல இசைஞானி இசையில் முழு பாடல்கள் எழுதினேன், பிரகாஷ்ராஜ் இயக்கத்துல. அந்த பாடல்களும் நன்றாக பேசப்பட்டன.

இந்த படத்துல, படம் முழுக்க  காதல் பாடல்கள், 8 பாட்டு, அதுல 7  பாட்டு காதல் பாட்டுன்றது , ரொம்ப இனியானது.டைரக்டரும் சரி, இசைஞானியும் சரி முழு சுதந்திரம் கொடுத்தாங்க…பாடல்களை ஒவ்வொரு வரியும் ரசித்து இது நல்லா இருக்கு, அது நல்லாருக்குன்னு சொல்லி பாராட்டினாங்க.

இந்த பாடல்கள் எல்லாமே முதல்ல  டியூன் கம்போஸ் பண்ண பிறகு,  மும்பைல  குரல் பதிவு நடந்துச்சி. அப்புறம் இசைப்பதிவுக்காக லண்டனுக்கு போனாங்க, இசைஞானியும், கௌதம் அவர்களும்..எனக்கு இந்த பாடல்களை எழுத நேரம் ரொம்ப குறைவா இருந்தது. ஏன்னா , சிங்கர்ஸ், ஸ்டுடியோ எல்லாம் ஒரு வாரம்தான்ங்கற ஒரு நெருக்கடி இருந்தது. அதனால் நான்கைந்து நாட்கள்ல எழுதப்பட்ட பாடல்கள்தான் இந்த படத்தோட பாடல்கள்….

 ‘சாய்ந்து சாய்ந்து’… பாடல் எழுதிட்டிருக்கும் போது, திடீர்னு ‘சற்று முன்பு’… பாடல் பாட  வர்றாங்க…ன்னு சொல்வாங்க, சரின்னு சாய்ந்து சாய்ந்து பாட்டை எழுதறத நிறுத்திட்டு, சற்று முன்பு பாடல் எழுத ஆரம்பிச்சிடுவேன்….படத்தோட கதை தெரிஞ்சதால என்னால இதை உடனே கொண்டு வர முடிஞ்சது. கௌதம் சாரை பொறுத்த வரைக்கும், முதல் முறை பார்த்த ஞாபகம் …பல்லவி எழுதி காட்டுவேன், படிச்சிப் பார்த்துட்டு நல்லா இருக்கு, சரணம் போய்டுங்கன்னு சொல்வாரு….இல்ல சார் வேற வேணா எழுதி தர்றன்னு சொல்வேன், இல்ல முத்துக்குமார், இதுவே நல்லா இருக்கு, ஏன் வேறன்னு சொல்வாரு….என் கதைக்கு இது பொருத்தமான பல்லவி சரியா இருக்குன்னு சொல்வாரு …அந்த அளவுக்கு கவிதை ரசிகர் அவர்.

 இந்த பாடல்கள பதிவான நாள்ல இருந்து குறைந்த பட்சம் 200 முறையாவது கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறை கேட்கும் போதும், புதுசு  ஏதோ ஒன்னு காதுக்குள்ள நுழையுது, இதயத்துக்குள்ள நுழையுதுங்கற மாதிரி இருக்கும். ஒரு டிவைன் மியூசிக்னு தான் இதை சொல்லணும்…

இலக்கிய வாதிகள், ரசிகர்கள் கிட்ட இருந்து நிறைய போன் வந்துட்டிருக்கு… இந்த படத்தோட பாடல்கள் எனக்கு புதுசா ஒரு உற்சாகத்தை எனக்குள்ள ஏற்படுத்தியிருக்கு…

இசைஞானியைப் பொறுத்த வரைக்கும் பத்து வருஷம் முன்னாடி ‘ ஜுலி கணபதி ’ படத்துல முதல் முறையா பாட்டு எழுதும் போது, ஒரு பரீட்சை அறைக்குள்ள நுழையற மாணவன் மாதிரிதான் நுழைந்தேன். அவர் எனக்குள்ள இருக்கிற பதட்டத்தை பார்த்துட்டு,  நிறைய ஜோக்லாம் அடிச்சி, என்னோட பதட்டத்தையெல்லாம் தணிச்சி, ஒரு இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாரு..பாடல்கள் வரிகள்லாம் நல்லா இருந்தால் உடனே பாராட்டிடுவாரு.

சமீபத்துல கூட மேகா ங்கற படத்துல பாடல்கள் எழுதி இருந்தேன். நான்கைந்து பல்லவி எழுதி கொடுத்தேன், முதல் பல்லவியே நல்லா இருந்ததுன்னு அத ஓகே பண்ணிட்டாரு. மீதி பல்லவியும் படிச்சாரு. அதையும் ஓகே பண்ணாரு…நான் சீக்கிரம் ஓகே பண்ண மாட்டேன். இது எல்லாமே நல்லா இருககு…இத இந்த படத்துல இல்லன்னாலும், வேற படத்துலயோ, இல்ல தனிப்பட்ட கவிதையாவே பயன்படுத்துங்கன்னு சொன்னாரு….அதெல்லாம் எனக்கு கிடைச்ச பாக்கியம்தான்…

அதில்லாம அவருக்கு என்மேல தனிப்பட்ட அன்பு இருக்கு…கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து, அவர் வெளியில வந்த முதல் பொது நிகழ்ச்சி என்னுடைய திருமணம்தான். அவருடைய இசைஞானி அறக்கட்டளை சார்பா எனக்கு இளம் சாதனையாளர் விருது கொடுத்திருக்காரு….

இந்த படத்துல பணியாற்றியது மிக இனிமையான அனுபவம். சாய்ந்து சாய்ந்து…பாடலை  யுவன் பாட வந்தப்போ, ராஜா சார் இருந்தால் பாட வராதுன்னு சொல்லிட்டு,  எனக்கு பயமா இருககுன்னு ராஜா சாரை பக்கத்து ரூமுக்கு போக சொல்லிட்டு, லைட்டை எல்லாம் நிறுத்திட்டு யுவன் கூச்சத்தோட பாட ஆரம்பிச்சாரு….இந்த படத்தோட பாடல்களை கேட்டுட்டு யுவன் ட்விட்டர்லலாம் எல்லாருக்கும் தெரியற மாதிரி பாராட்டினாரு…அவர் பாடியுள்ள, சாய்ந்து சாய்ந்து…பாடலும், பெண்கள் என்றால்… பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகும்…அது மட்டுமில்லாம இந்த படத்தோட பாடல்கள் எல்லாமே மிகப் பெரிய அளவிலே மக்கள் கிட்ட போய்ச் சேரும்னு சொன்னாரு….

இந்த படத்தோட பாடல்களைப் பொறுத்த வரைக்கும், சற்று முன்பு… பாடல், கிளைமாக்சுக்கு முன்பு வர்ற பாட்டு…கஷ்டமான சிச்சுவேஷன்..கொஞ்சம் வழுக்கினாலும்….அந்த சிச்சுவேஷனை விட்டு விலகிப் போயிடும்…கத்தி மேல நடக்கிற மாதிரி இருந்தது…படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கும் புரியும்….கதையும் வெளிய தெரியக்கூடாது..அப்படிங்கற நிலைமையில ரொம்ப கவனத்தோட , கொஞ்சம் கஷ்டத்தோட எழுதி நல்லா வந்திருக்கிற பாட்டா அமைஞ்சுது…

புடிக்கல மாமு..பாடல் 80கள்ல வர்ற மாதிரியான சிச்சுவேஷன் …அதனால அந்த காலத்துல பயன்படுத்தின வார்த்தைகள்ல வச்சி எழுதின பாட்டு…

இந்த படத்துல இருக்கிற எல்லா பாட்டுமே ரொம்ப பிடிச்ச பாடல்கள்…என்னோடு வா….சாய்ந்து சாய்ந்து…முதல் முறை…வானம் மெல்ல…எனக்கு ஸ்பெஷலான பாடல்கள்…

ஒரு படத்துல அனைத்துப் பாடல்களையும் எழுதறப்போ, முழு கதையும் தெரியும்கறதுனால  , ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் வித்தியாசகம் காட்டலாம். ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்குமே தொடர்சசியும் காட்டலாம்.  சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா…ன்னு பல்லவி ஆரம்பிச்சிருக்கும்,  அ,த வரிக்கும் என்னோடு வா வா…பாடல்…ல கன்னம் தொடும் கூந்தல் உதிர்க்க நீ சாய்வது என்னைக் கொஞ்சம் பார்க்கத்தானடி..ன்னு வரும்..இது ரெண்டுக்கும் ஒரு தொடர்பும் இருக்கும், வித்தியாசமும் இருக்கும்…இந்த மாதிரியான ஒரு அனுபவத் தொடர்சசிய பாடலகள்ல கொண்டு வரலாம்…..ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு தொடர்ச்சி, லின்க் வச்சிருக்கோம்….

என் குருநாதர் பாலுமகேந்திரா அவர்கள் என்னை இசை வெளியீட்டின் போதே கை கொடுத்து பாராட்டியது..ரொம்பவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்…இசைஞானியின் இசையில் அனைத்துப் பாடல்களையும் நான் எழுதியதற்காக ரொம்ப பாராட்டினாரு…

இந்த படத்துக்காக இசைஞானி அவர்களின், சிம்பொனி இசைக்கு,  தமிழ்ப் பாடல்களை நான் எழுதியதற்காக என்றென்றும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்”.

 எண்ணற்ற படங்களில் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும், நா.முத்துக்குமார்  தொடர்ந்து பல வெற்றிகளை பெற நம் சார்பாக வாழ்த்துவோம்.

Read Previous

சுந்தரபாண்டியன் – டைட்டிலுக்கு தடை….

Read Next

மன்னிச்சிடுங்க…-பாடகர் உன்னி கிருஷ்ணன்