‘சுந்தரபாண்டியன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன், சசிகுமார் மீண்டும் இணைந்திருக்கும் படம்.
சாதி, மதமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும், அதை நோக்கி இளைஞர்கள் பயணிக்க வேண்டும் என்ற சமூகக் கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரபாகரன்.
கரூர் அருகில் உள்ள கிராமத்தில் சிறு வயது முதலே எந்த சாதி வித்தியாசம் இல்லாமல் நண்பர்களை வைத்திருக்கிறார் சசிகுமார். அவர்களது ஊரில் நடக்கும் பஞ்சாயத்துத் தேர்தல் காரணமாக அந்த நண்பர்களுக்குள் பிரிவு வருகிறது. அவர்களில் இருவர் கொல்லப்படுகிறார்கள். ஊரில் மீண்டும் அமைதியை நிலை நாட்ட சசிகுமார் முயற்சிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
சசிகுமாருக்கென்றே எழுதப்பட்ட கதை, கதாபாத்திரம் போல இருக்கிறது. அப்படியே அதற்குள் சரியாக ‘ஃபிட்’ ஆகிவிடுகிறார் சசிகுமார். கதாநாயகி மடோனா செபாஸ்டியனுக்கு அதிக வேலையில்லை.
சூரி, ஹரிஷ் பெரடி, மகேந்திரன் படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்கள். சசிகுமார் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் பொருத்தமான தேர்வு.
திபு நினன் தாமஸ் பின்னணி இசையில் உழைத்திருக்கிறார். என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள், இரவு நேரக் காட்சிகள் படத்தை ரசிக்கக் காரணமாக அமைகின்றன.
படத்தின் ஹைலைட்டே கிளைமாக்ஸ்தான். யாரும் யூகிக்க முடியாத ஒரு கிளைமாக்ஸை வைத்திருக்கிறார் இயக்குனர்.