அனந்தன் காடு – விமர்சனம்

1990களின் கொந்தளிப்பான காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு, தமிழீழப் போராட்டத்தின் நிழல்கள், கேரளாவின் நிழல் உலகம், அரசியல் சதிகள் எனப் பல அடுக்குகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது ‘அனந்தன் காடு’. இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இந்த ஆக்ஷன் திரில்லரை விறுவிறுப்பான வேகத்தில் கொண்டு சென்றிருக்கிறார். நடிகர் ஆர்யா தலைமைப் பாத்திரத்தில் இறங்கி, தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் எந்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கதை சுருக்கமாகச் சொன்னால், 90களில் தமிழீழப் போராளி ஆர்யா, இலங்கை ராணுவத்துடனான மோதலுக்குப் பிறகு கேரளாவில் தஞ்சம் புகுகிறார். அங்குள்ள குற்றப் பின்னணி கொண்ட சிலரின் அடைக்கலத்தில் அவர் இருக்கும்போது, கேரள முதல்வர் தனது அரசியல் எதிரிகளை ஒழிக்க காவல்துறை உயர் அதிகாரி மூலம் குற்றவாளிக் கும்பலைப் பயன்படுத்த திட்டமிடுகிறார். ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறும் முன், ஆர்யா ஒரு முக்கிய நபரை கொடூரமாகக் கொலை செய்கிறார். இதற்கான காரணம் என்ன? அதன் பின்னர் அவரது வாழ்க்கையும், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது? என்பதை ஆக்ஷன் தொனியில் சொல்கிறது படம்.

நாயகனாக ஆர்யா தனது பாத்திரத்திற்கு முழு நீதி சேர்த்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவர் தனது உடல் மொழியாலும், தீவிரத்தாலும் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துள்ளார். இருப்பினும், சில இடங்களில் தமிழர்களைப் பற்றிய கொச்சையான சித்தரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

குற்றவாளிக் குழுவாக நடித்த முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத் ஆகியோர் தங்கள் வேடங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்களாகத் தெரிகிறார்கள். உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர்கள் இயல்பாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக முரளி கோபி (திரைக்கதை எழுத்தாளரும்கூட) தனது பாத்திரத்தில் தனித்து நிற்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த கேரள காவல்துறை உயர் அதிகாரியாக சுனில், கேரள முதல்வராக விஜயராகவன், மற்றும் சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் உள்ளிட்டோர் தங்கள் பங்கைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.

தொழில்நுட்ப அம்சங்களில் ஒளிப்பதிவாளர் எஸ். யுவா 90களின் சூழலை மிகவும் உண்மையாகவும், இயல்பாகவும் படம்பிடித்திருக்கிறார். பி. அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகளுக்கும் உணர்ச்சிக் காட்சிகளுக்கும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ரோஹித் வி.எஸ். வரியத்தின் படத்தொகுப்பு படத்தை எந்த இடத்திலும் தொய்வடையாமல் வேகமாக முன்னெடுத்துச் செல்கிறது. கலை இயக்குநர் ரஞ்சித் கோத்தேரி காட்சிகளை அந்தந்த கால கட்டங்களுக்கேற்படி உருவாக்கி இருக்கிறார்.

திரைக்கதை, வசனம் எழுதிய முரளி கோபி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதை கமர்ஷியல் ஆக்ஷன் பாணியில் கொண்டு வந்திருக்கிறார். கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், சில கதாபாத்திர சித்தரிப்புகளும் சம்பவங்களும் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடியவையாக அமைந்துள்ளன.

இயக்கத்தில் ஜியென் கிருஷ்ணகுமார் படத்தை வேகமாகவும், இறுக்கமாகவும் கொண்டு சென்றிருக்கிறார். இலங்கை, கேரளம், தமிழகம், ராஜஸ்தான் என, பல்வேறு இடங்களுக்கு கதை நகர்ந்து போகிறது.

மொத்தத்தில், ஆக்ஷன் காட்சிகளின் வடிவமைப்பு, நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், தயாரிப்பு தரம் ஆகியவை ஆக்ஷன் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் அளவுக்கு இருக்கின்றன. ‘அனந்தன் காடு’ தூய ஆக்ஷன் பிரியர்களுக்கு ஒரு திருப்திகரமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் படமாக அமைந்துள்ளது.

Read Previous

விக்ரம் பிரபு நடிக்கும் 26வது படம்

Read Next

கான்சிட்டி – விமர்சனம்

Most Popular