டேக் ஓகே புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் ரெட்டி தயாரிக்க, சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் ‘யாரோ’.
ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை. ஒரு மாறுபட்ட களத்தில் புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் வழங்குகிறார்.
இப்படத்தில் வெங்கட் ரெட்டி நாயகனாக அறிமுகமாகிறார். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்குஙம தயாராகி வரும், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியதாவது,
ஐ.டி. துறையில் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெங்கட், சினிமா ஆசையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் சந்தீப் சாய் அழகாக இயக்கியிருக்கிறார். இப்படத்தை பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிடுகிறோம். உங்களுக்குப் பிடிக்கும், ஆதரவு தாருங்கள்.
இயக்குநர் சந்தீப் சாய் பேசுகையில்,
நானும் வெங்கட்டும் ஐ.டி.யில் ஒன்றாக வேலை செய்தோம். இருவருக்கும் சினிமா ஆசை இருந்தது. வேலையை விட்ட பிறகு ஒரு குறும்படம் செய்தேன். அதை பார்த்துவிட்டு வெங்கட் படம் செய்யலாம் என்றார். அப்படித்தான் இப்படம் துவங்கியது. அவர் மிக அர்ப்பணிப்பு உணர்வுடன் படத்தை செய்திருக்கிறார். என்னுடைய குழுவினரால் தான் இப்படம் அழகாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசைதான் படத்தின் முழு பலமும். அவரில்லாமல் படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. ஒளிப்பதிவாளர் K.B. பிரபு என்ன சொன்னாலும் அதனை கூலாகக் கையாண்டு, அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். எங்கள் குழுவினருக்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
படத்தின் இறுதி வரையிலும், பரபரப்பாக புதுமையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துதான் எழுதினோம். படத்தைப் பார்க்கும்போது நீங்களும் அதை உணர்வீர்கள். எடிட்டர் அனில் கிருஷ்ணனின் அதிநவீன மற்றும் தனித்துவமான எடிட்டிங் பாணி ‘யாரோ’ படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளது. இப்படம் உருவாக முழுக்காரணம் என் நண்பர் வெங்கட் தான். இந்தக் கதையை அவ்வளவு எளிதாக யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், அவர் இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து உழைத்திருக்கிறார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.
ஒளிப்பதிவாளர் KB பிரபு பேசியதாவது,
குறும்படம் செய்துதான் திரைத்துறைக்கு வந்தேன். என் ஒளிப்பதிவில் இன்னொரு படமும் தயாராகி வருகிறது. இயக்குநர் சந்தீப்பை எடிட்டர் மூலமாகத்தான் சந்தித்தேன், மிகத் திறமையானவர். நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம், ஆதரவு தாருங்கள்.
எடிட்டர் அனில் கிரிஷ் பேசுகையில்,
இளைஞர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். எப்போது இந்தப் படம் வெளியாகும் என ஆவலாக இருந்தேன். இப்போது சரியான நேரத்தில் வெளியாகிறது. சந்தீப் என் நண்பர், இந்தப் படத்தின் கதை உருவான சமயத்தில் இருந்தே தெரியும். படத்தில் வேலை பார்த்த அனைவரும் நண்பர்கள் தான். நான் லீனியர் பேட்டர்னை எடிட்டிங்கில் முயற்சித்துள்ளேன். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். இந்தப் படத்தை அழகாக உருவாக்கியுள்ளோம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் பேசியதாவது,
நான் இதற்கு முன் ‘நெடுநல்வாடை’ படத்திற்கு இசையமைத்தேன், அப்படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இது என் இரண்டாவது படம். இயக்குநர் சந்தீப் சாய் 10 ஆண்டுகளாக என் நண்பர். இந்தப் படத்தின் பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிகம் உழைத்திருக்கிறோம். ஒரு புதுமையான சைக்கோ-திரில்லர், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்.
தயாரிப்பாளர், நடிகர் வெங்கட் பேசியதாவது,
தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு முதலில் நன்றி. மிக இயல்பாக என்னிடம் பழகி, எனக்கு சினிமா பற்றி சொல்லி தந்து, இப்படத்தை வெளியிடுவதற்கு நன்றி. இப்படம் திரைக்கு வர அவர்தான் காரணம். இந்தப் படத்தை எடுக்க தீர்மானித்துவிட்ட பிறகு, படத்தை திட்டமிட ஆரம்பித்த போதே, நிறைய சிக்கல்கள் வந்தது. அதையெல்லாம் தாண்டிதான் இப்படத்தை எடுத்தோம். படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் வேண்டுமென பல காலமாக தேடினோம், நிறைய பேர் எங்கள் பட்ஜெட்டில் வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள், இறுதியாகத்தான் பிரபு வந்தார். பணத்தை மதிக்காதவர், சினிமாவை நேசிப்பவர். இந்தப்படத்திற்கு ஒரு தூணாக இருந்தவர் எடிட்டர் அனில். எங்களுக்கு படத்தில் என்ன சிக்கல் வந்தாலும் அவரிடம் தான் சொல்வோம். அவர் அதை சரி செய்து தருவார். இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் அருமையான இசையை தந்திருக்கிறார், அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம்.
இந்த ஆறு வருடத்தில் நான் அதிகம் பேசியது சந்தீப் உடன் தான். நிறைய சண்டை போட்டிருக்கிறோம், எப்போதும் ஒரு சிறந்த நண்பனாக இருந்திருக்கிறார். எனக்காக ஒரு மிகச் சிறந்த பாத்திரத்தை இந்த படத்தில் உருவாக்கித் தந்திருக்கிறார். எல்லா நடிகருக்கும் இந்த மாதிரியான பாத்திரம் கிடைத்து விடாது, ஆனால் எனக்கு முதல் படத்தில் கிடைத்திருக்கிறது. சந்தீப் மிகச்சிறந்த திறமையாளர். அதை இந்த படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். நாயகி உபாசனா யாரும் நடிக்கத் தயங்கும் பாத்திரத்தில் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார், அவருக்கு நன்றி. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. ஒரு புதுமையான ஹாரர் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஆதரவு தாருங்கள்.