’ப்ளூ ஸ்டோரி’ பெயருடன் உருவாகும் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் படம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘எல்.ஐ.சி’. இந்தப் படம் அறிவிக்கப்பட்ட போதே தலைப்பு சர்ச்சையில் சிக்கியது. ‘எல்.ஐ.சி’ நிறுவனம் தங்களுடைய பெயரை உபயோகப்படுத்தக் கூடாது என்று தடைவிதித்தது. மேலும் 7 நாட்களுள் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் கூறியது.
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் புதிய பெயரை வைக்க முடிவு செய்தனர். ஆனால், படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாளை (ஜூலை 25) பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு படத்தின் புதிய தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இது தொடர்பாக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் போஸ்டருடன் கூடிய GOOGLE DRIVE- லிங்க்கை எஸ்.ஜே.சூர்யாவுக்கு அனுப்பியிருக்கிறது. அதில் ‘ப்ளூ ஸ்டோரி’ தலைப்பு வெளியீடு என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தவறுதலாக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.
உடனடியாக தவறு செய்துவிட்டதை உணர்ந்து நீக்கிவிட்டார். இதை வைத்து பலரும் ‘ப்ளூ ஸ்டோரி’ தான் தலைப்பு என கூறிவருகிறார்கள். இந்தப் படம் தொடங்கப்பட்ட போது ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். ‘இந்தியன் 2’ பணிகள் காரணமாக விலக, நீரவ் ஷா பணிபுரிந்து வந்தார். தற்போது அவரும் விலகி சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.