‘தங்கல்’ படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி, ‘ராமாயணம்’ படத்தினை இயக்கவுள்ளார்.
இதற்காக 5 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். நடிகர்கள் தேர்வு, கிராபிக்ஸ் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ‘ராமாயணம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த (மார்ச்) மாதம் மும்பையில் தொடங்கவுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஏப்ரலில் ராம நவமி தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், ஹனுமனாக சன்னி தியோல், கைகேயியாக லாரா தத்தா, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். ஜூலை மாதம் வரை முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிராபிக்ஸ் காட்சிகள் பணிகள் தொடங்கி, 2025-ம் ஆண்டு இறுதியில் தான் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் படக்குழு முடித்துவிட்டது.
‘ராமாயணம்’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின் போதே, வெளியீட்டு தேதியும் அறிவிக்கவுள்ளது படக்குழு. 2-ம் பாகம், 3-ம் பாகம் உள்ளிட்டவைகளின் படப்பிடிப்பு எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை.