2 டி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், சூர்யா நாயகனாக நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.
கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா தொழிலாளர்கள் பலர் வேலையின்றி கடந்த ஐந்து மாத காலமாக தவித்து வருகிறார்கள். அவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் ‘சூரரைப் போற்று’ பட வெளியீட்டுத் தொகையிலிருந்து 5 கோடி ரூபாய் நிதி தருவதாக சூர்யா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதில், முதல் கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. சினிமா தொழிலாளர்கள் அமைப்பான 'பெப்ஸி' க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்ஸியின் தலைவர் ஆர். கே. செல்வமணியிடம் 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் 20 லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக்கொண்டு, அதை நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்தத் தொகைகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகிக்கித்தார். 2 டி பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பரபூரசுந்தரபாண்டியன், மற்றும் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சுரேஷ்காமாட்சி, லலித்குமார் ஆகியோரும் பங்கேற்றார்கள்.
மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.