உலகப்புகழ் பெற்ற காளிதாசின் 'அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும் 'ஷாகுந்தலம்' மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் , தில் ராஜு, குணா டீம் வொர்க்ஸுடன் இணைந்து வழங்க, நீலிமா குணா தயாரிக்க, குணசேகரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது.
இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் டிசம்பர் 4-ல் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது வேறொரு நாளில் இந்த படம் வெளியாக உள்ளது.
புராதன கதையை இன்னொரு பரிமாணத்தில் காண்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் மெருகேற்றும் விதமாக, இந்தத் திரைப்படத்தினை 3 டி – யில் வெளியிட உள்ளனர். முழுமையாக 3 டி – யில் படத்தினை உருவாக்கிய பின்னரே ரிலீஸ் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் கதை, உலகப் புகழ்பெற்ற புராதன காவியமான மகாபாரதத்தில் உள்ள ஷகுந்தலை மற்றும் ராஜா துஷ்யந்தன் ஆகியோரின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் சமந்தா 'ஷகுந்தலை’ ஆகவும்', தேவ் மோகன், 'ராஜா துஷ்யந்தன்' ஆகவும் நடித்துள்ளனர்.
சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம். மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கூடுதல் ஈர்ப்பாக, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் 'அல்லு அர்ஹா' இளவரசர் 'பரதர்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.