நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதில்லை என்பதை கடந்த மாதக் கடைசியில் ஒரு நீண்ட அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாய் அறிவித்தார்.
இருப்பினும் சில ரசிகர்கள் ரஜினியை அரசியலில் இறங்கச் சொல்லி போராடப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அப்படி போராட நினைக்கும் ரசிகர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அதன் நிர்வாகி சுதாகரன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும், மருத்துவர்கள் ஆலோசனைகளையும் மீறி அரசியலுக்கு வந்தால், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பிவரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணப்படியும், தான் அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்து நம் அன்புத்தலைவர் வெளிப்படையான, தெளிவான அறிக்கை ஒன்றைக்கொடுத்திருந்தார்.
அதன்பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசி வருதுவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல். இந்த போராட்டத்திற்க ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.
நம் தலைவரின் மீது அன்பும், அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்களும், ரசிகர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.