லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்க மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் இன்று லைகா நிறுவனத் தலைவர் சுபாஷ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டன. சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போஸ்டர்களைப் பார்க்கும் போது உடனடியாக படத்தைப் பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
படத்தை இந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப் போவதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதனால், ரசிகர்கள் சுமார் ஏழு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துக்ளும், வீரர்களுக்கும், சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான நாவல் கல்கி எழுதிய வரலாற்று நாவல் “பொன்னியின் செல்வன்”. இந்நாவலை இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரின் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டன. சமூக வலைத்தளங்களில் இவர்களது தோற்றம் பற்றித்தான் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள், நடிகைகள் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படைப்பாக இந்தப் படம் வெளியாக உள்ளது.
