ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’.
அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் பற்றி படத்தின் நாயகன் அசோக் செல்வன் கூறியதாவது,
“ஓ மை கடவுளே” என் வாழ்வில் முக்கியமான படம். பல வருடங்களாக இயக்குநர் அஷ்வத்தை எனக்கு தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம்.
தமிழில் ரொமான்ஸ் கதைகள் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால காதல் கதை பண்ணலாம்னு முடிவு பண்ணி பண்ணதுதான் இந்தப்படம்.
படத்தில் நாயகி ரோல் முக்கியமானது. ரித்திகா சிங் பண்ணினா நல்லாருக்கும்னு இரண்டு பேரும் நினைத்தோம். அவங்க தேர்ந்தெடுத்து படங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால ஒத்துக்குவாங்களானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா கதை கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சது.
படமே அவங்கள சுத்திதான் நடக்கும். ரித்திகா மிக நட்பாக இருந்தார், அது நடிக்கும் போது எனக்கு உதவியாக இருந்தது. வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவங்களுக்கு தமிழ்ல இது முதல் படம் நல்லா பண்ணியிருக்காங்க.
அப்புறம் படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் துபதி அண்ணாகிட்ட கேட்டோம். அவருக்கு பெரிய மனசு, எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள்.
எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர் கொண்ட கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை. அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது.
அக்கா அபிநயா செல்வம் தான் இந்தக் கதையை முதலில் நம்பினார். அப்புறம் டில்லி பாபு சார் ‘ராட்சசன்’ படத்திற்குப் பிறகு இப்படத்தை நம்பி எடுத்தார். இருவருக்கும் எனது நன்றி.
டீஸருக்கு கிடைத்த வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாருக்கும் பிடிக்கும்,” என்றார்.
ரித்திகா சிங் கூறுகையில்,
“நான் அதிகமாக படங்கள் செய்வதில்லை. நல்ல படங்கள் மட்டுமே செய்யலாம்னு வெயிட் பண்ணேன். வாய்ப்புகள் வந்தாலும் தேர்ந்தெடுத்து பிடித்ததை செய்தால் போதுமென்று நினைத்தேன்.
இந்தக் கதை கேட்டதும் பிடிச்சது. இந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சது. அசோக் செல்வன் நடிக்கும் போது ரொம்ப உதவியா இருந்தார். விஜய் சேதுபதி கூட எனக்கு காட்சிகள் இல்ல. ஆனால் படப்பிடிப்பில் சென்று ஒரு நாள் அவரை சந்தித்தேன். அவருடன் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்திருக்கிறேன். நிறைய பேசினோம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
நான் செய்யும் பாத்திரங்கள் எனக்கு பிடிக்க வேண்டும். படம் ஓடுகிறதா, இல்லையா, என்பது வேறு விசயம். செய்யும் வேலையில் மகிழ்ச்சியாக நாம் இருக்க வேண்டும். இபடத்தில் மிக சந்தோஷமாக இருந்தேன். படம் இளைஞர்களை ஈர்க்கும்படி அமைந்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும்,” என்றார்.
பிப்ரவரி 14ம் தேதி இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.