மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்த முடியாமல், அவரது மூன்றாவது மனைவியான நடிகை மௌனிகா பத்திரிகை பேட்டி மூலம் அவரது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
அதன் பின், சிலரது முயற்சியால் அவர் நேற்று காலை பாலுமகேந்திராவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அவரை சிலர் வரக்கூடாது என தடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. கடைசியில் பாலுமகேந்திராவின் மகனே மௌனிகா வந்து அஞ்சலி செலுத்த சம்மதித்ததைத் தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இது பற்றி நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த மெளனிகா,
“நான் அவரை திருமணம் செய்து கொண்டதைப் பற்றி சில வருடங்களுக்கு முன் பாலுமகேந்திரா பத்திரிகைகளுக்கு பேட்டி மூலம் வெளி உலகிற்கு தெரிவித்தார். அன்று முதலே அவரது முதல் குடும்பத்தினருடன் நான் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
எங்கள் இருவரின் அன்பை பற்றி அப்போதே இயக்குனர் பாராதிராஜாவிடம் அவர் சொல்லி வைத்திருந்தார். இப்போது, பாரதிராஜா, விடுதலை, வெற்றிமாறன் ஆகியோரின் முயற்சியால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிந்தது.
10 ஆண்டுகளுக்கு முன்பே, நான் உன்னை பிரிந்துவிட்டால், நீ நிச்சயம் அழாமல் வந்து என் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு உடனே சென்றுவிட வேண்டும் என்று என்னிடம் சொல்லியிருந்தார்.
அவரைப் பார்க்க விடாதவர்கள் பற்றி இனி எதுவும் பேச வேண்டாம். எல்லோர் மனதிலும் இடம் பிடித்த அந்த ஆத்மா இனி இல்லை…”, என தெரிவித்திருக்கிறார்.
