கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா மற்றும் பலர் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள ‘கொம்பன்’ படத்தைப் பற்றி கடந்த சில நாட்களாக தேவையற்ற சர்ச்சைகளை சிலர் கிளப்பி வருகிறார்கள்.
இந்தப் படம் சாதி அடிப்படையிலான படம் என்றம், இந்தப் படம் வெளியானால் சமுதாய மோதல்கள் உருவாகலாம் என கற்பனையான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தப் படம் எந்த விதமான மோதலையும் உருவாக்கக் கூடிய படமல்ல, முழுக்க முழுக்க அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படம் என்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
“ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் நல்ல திரைப்படங்களைத் தயாரித்து மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் நிறுவனம்.
ஏப்ரல் 2 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்து முத்தையா இயக்கத்தில் வெளியாக இருக்கும், ‘கொம்பன்’ திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் எந்த ஒரு ஜாதியைக் குறிக்கும் காட்சியமைப்போ, வசனங்களோ இடம் பெறவில்லை. இது முழுக்க, முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.
இதில் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தியோ அல்லது குறிப்பிட்ட ஜாதியை தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம் பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
யூகத்தின் அடிப்படையில் ‘கொம்பன்’ திரைப்படம் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. படம் வெளிவந்தவுடன் இவை அனைத்தும் அடிப்படையற்றவை என்பது அனைவருக்கும் தெரியவரும்.
பல கோடி செலவில் பலரது கடும் உழைப்பில் உருவாகியுள்ள ‘கொம்பன்’ திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்,’’ என தெரிவித்துள்ளனர்.