‘சங்கமித்ரா’விலிருந்து ஸ்ருதிஹாசன் விலகல், ரசிகர்கள் மகிழ்ச்சி கமெண்ட்ஸ்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனுடன் தொடர்ந்து பணிபுரிய முடியாதென தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அறிவிப்பு வந்தது.

அதைத் தொடர்ந்து, ஸ்ருதிஹாசனின் சார்பாக வெளியிடப்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கை ஒன்றில், “படத்தின் ஸ்கிரிப்ட் தன்னிடம் வழங்கப்படவில்லை என்றும், படப்பிடிப்புத் தேதிகளைச் சரியாகச் சொல்லாதததால் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகியதாகவும்,” தெரிவிக்கப்பட்டது.

தேனாண்டாள் நிறுவனத்தின் டிவிட்டரில் ஸ்ருதிஹாசன் விலகியது பற்றிய அறிவிப்பு வெளிவந்ததும், ரசிகர்கள் அதில் பல்வேறு விதமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டனர்.

அதில் பலரும் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியது மிகவும் நல்லது என்று கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். ‘புலி’ படம் ஞாபகம் இப்போதுதான் இயக்குனருக்கு வந்ததோ என்றும் கேட்டுள்ளனர். படம் இனி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களுக்கு அதில் முழு திருப்தி இல்லை.

இப்படித்தான் ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலையாள மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்ததையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஸ்ருதிஹாசன் தரப்பில் சொல்வது போல, ‘சங்கமித்ரா’ படக் கதைப் புத்தகத்தின் முழுவடிவத்தையும் அவருக்குத் தரவில்லை, படப்பிடிப்புத் தேதிகள் பற்றி சரியாகச் சொல்லவில் என்ற காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. அப்படி அவை எதுவும் தெரியவில்லை என்றால் பத்து நாட்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் செலவில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அவர் ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

கேன்ஸ் விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டு, ஏ.ஆர்.ரகுமானுடன் செல்ஃபி எல்லாம் எடுத்துக் கொண்டு, பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்துவிட்டு, தற்போது படத்திலிருந்து விலகியதற்கான காரணமாக அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது.

நல்ல வேளை பாதிப் படத்திலிருந்து விலகாமல், ஆரம்பத்திலேயே ஸ்ருதிஹாசன் விலகினாரே, அது தயாரிப்பாளருக்கு ரொம்பவே நல்லது.

Read Previous

‘சங்கமித்ரா’ – ஸ்ருதிஹாசன் விலகல்

Read Next

‘குள்ளன்’ என கமல்ஹாசன் குறிப்பிடுவது சரியா ?