‘ஸ்பைடர்’ – தமிழில் சொந்தக் குரலில் பேசிய மகேஷ் பாபு

என்விஆர் சினிமாஸ், தாகூர் மது தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், பரத், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’.

இதுவரை மகேஷ் பாபு நடித்த தெலுங்குப் படங்கள்தான் தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்தன. ‘ஸ்பைடர்’ படம் மூலம் மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார்.

இப்படத்திற்காக மகேஷ் பாபு அவரது சொந்தக் குரலில் தமிழில் பேசி டப்பிங் செய்து முடித்துள்ளார்.

”இந்தத் தொழில் பக்தியும் நேர்மையும் தான் மகேஷ் பாபு அவர்களை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவரது தமிழும், தமிழ் உச்சரிப்பும் அவ்வளவு சிறப்பாக உள்ளது. ஆரம்ப காலங்களில் அவர் சென்னையில் வாழ்ந்தது அவரது தமிழிற்கு மிகவும் உதவியுள்ளது. சென்னையுடனான நெருக்கம், அவரை இங்கும் வெற்றி பெற, பெரிய உந்துதலாக இருக்கின்றது,” என இப்படத்தின் தயாரிப்பாளர் தாகூர் மது கூறினார்.

செப்டம்பர் மாதம் 9ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 27ம் தேதி படம் வெளியாக உள்ளது.

Read Previous

சமூக வலைத்தளங்கள், முழுமையாக விலகினார் சிம்பு

Read Next

சுசீந்திரனின் ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’