விருது வழங்கும் மேடையில் நானியின் கருத்தினால், விருது குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஹைதராபாத்தில் பிரபலமான தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த படங்கள், படக்குழுவினர், நடிகர்கள் என அனைவருக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இதில் தெலுங்கில் வெளியான ‘தசரா’ படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த நடன இயக்குநர் உள்ளிட்ட விருதுகளை அள்ளியது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.
இந்த விழா மேடையில் பேசும் போது நானி, “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது எல்லாம் விருது நிகழ்ச்சிகளில் ஆர்வம் குறைந்துவிட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவது ஏனென்றால் படக்குழுவினர் தங்களுடைய பணிகளுக்கு விருதுகளை வெல்லும் போது பார்த்து பாராட்டுவதற்கு தான்” என்று குறிப்பிட்டார்.
விருது வழங்கு நிகழ்ச்சி மேடையிலேயே நானி இவ்வாறு தைரியமாக பேசியதை பலரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். அதன் தொடர்ச்சியாக ‘தசரா’ படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்கள். ‘தசரா’ இயக்குநர் இயக்கத்தில் மீண்டுமொரு படத்தில் நானி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.