மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வாழை’ படத்தினை பார்த்துவிட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர். இந்தப் படத்தினைத் தொடர்ந்து துருவ் விக்ரம் நடித்து வரும் ‘பைசன்’ படத்தினை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இதன் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது.
’பைசன்’ படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. மாரி செல்வராஜ் அளித்த பேட்டியொன்றில், ரஜினியுடனான படம் பேச்சுவார்த்தையில் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
அதே போல், கார்த்தியுடன் மாரி செல்வராஜ் இணைய இருப்பதும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘வாழை’ படத்தினை பார்த்துவிட்டு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கார்த்தி.
இதனால் பிரின்ஸ் பிக்சர்ஸ் – கார்த்தி – மாரி செல்வராஜ் கூட்டணியில் படமொன்று உருவாகும் என்பது உறுதி. ஆனால், எப்போது தொடங்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.