25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்; கார்த்தி ரசிகர்கள் தொடங்கிய திட்டம்

கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தினசரி அன்னதானத் திட்டத்தை ‘ஜப்பான்’ படத்தின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபுவும், அப்படத்தின் இயக்குநரான ராஜுமுருகனும் இணைந்து தொடங்கி வைத்தனர். இதன்போது கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும் உடனிருந்தனர். 

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25 வது திரைப்படம் ‘ஜப்பான்’. இதனை முன்னிட்டு 25 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் மற்றும் உழவன் அறக்கட்டளை சார்பில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதை விட, இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு நாள்தோறும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டனர்.

அக்டோபர் 17ஆம் தேதியான இன்று தொடங்கி, ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10ஆம் தேதி வரை  இந்த உணவு வழங்குவது தொடரும் என்று கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். இதன் போது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரம் மக்களுக்கான சுவையான உணவினை பரிமாறவிருக்கிறார்கள்.

பசித்த வயிறுக்கு உணவிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை கண்டு.. யாரேனும் ஒருவர் பசித்த ஒருவருக்கு உணவு வழங்கினாலும் கார்த்தியின் நோக்கம் வெற்றி பெறும் என கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அக்டோபர் 17ஆம் தேதியான இன்று சென்னையில் உள்ள தி. நகர் பகுதியில் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில நிர்வாகிகள், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் உடனிருக்க.. ‘ஜப்பான்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் இயக்குநர் ராஜுமுருகன் ஆகியோர் ஆயிரம் பேருக்கு சுவையான வழங்கும் திட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிக்கும் 25 வது படமான ‘ஜப்பான்’ படத்தின் வெற்றிக்காக.. 25 நாட்கள் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் உன்னத திட்டத்தை முன்னெடுத்ததற்காக திரையுலகினரும், ரசிகர்களும் கார்த்தி மற்றும் அவருடைய மக்கள் நல மன்றத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

Read Previous

எஸ். ஏ சந்திரசேகரன் நடிக்கும் ‘மோகினிப்பட்டி’

Read Next

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் திரில்லர் டிராமா

Most Popular