அப்புன்டு ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் ஆனந்தி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கமலி From நடுக்காவேரி‘.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது,
நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரம். என்னுடைய வாழ்க்கையில் அனைத்துப் பக்கங்களிலும் தூணாக இருந்தவர்கள் என்னுடைய அண்ணன் மற்றும் அண்ணி தான்.
நான் தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம் தான் கமலி கதாபாத்திரம். அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அந்த இடம் தான் இப்படத்தின் கருவாக தோன்றியது.
இப்படத்தில் கமலி காதல் செய்யும் போது எப்படி இருப்பாள் ? மகளாக எப்படி இருப்பாள் ? என்று ஒவ்வொரு கட்சியை நான் எப்படி எதிர்பார்க்கிறேனோ அப்படியே நடித்துக் கொடுத்தார் ஆனந்தி.
இந்த கதை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும்தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் வருகிறோம். கதை கேளுங்கள் பிடித்தால் பணியாற்றுங்கள் என்று கூறினோம். உடனே, வாரங்கல் சென்று கதை கூறினோம்.
கதையைக் கேட்ட அடுத்த நிமிடம் இப்படத்தை எப்போது எடுக்கலாம். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி நடித்துக் கொடுத்தார். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கமலியாகவே வாழ்ந்தார். அவருக்கு மிக்க நன்றி.
பிரதாப் போத்தனிடம் கதை கூறியதும் மிகவும் ஆர்வமாகப் பணியாற்றினார். பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன்.
இப்படத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். இசையமைப்பாளர் தனக்கென்று இசையமைக்காமல், படத்திற்கு என்ன தேவையோ அதை செய்தார் என்றார்.

‘கயல்’ ஆனந்தி பேசுகையில்,
என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதே போல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும்,” என்றார்.