அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.
காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ‘நெடுநல்வாடை, டாணாக்காரன்’ படங்களில் நடித்த அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்க வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இசை விழா சினிமா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தின் நாயகி அஞ்சலி நாயர் பேசுகையில்,
“இந்தப் படத்திற்காக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. ராதே கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஹரி மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. கௌஷிக், ஹெரோஷினி எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். இப்படம் உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும், ஆதரவு தாருங்கள் நன்றி,” என்றார்.
நாயகி ஹெரோஷினி பேசுகையில்,
“என் டீமுக்கு முதல் நன்றி. அவர்களால்தான் இந்தப் படம் மிக அழகாக வந்துள்ளது. நாங்கள் அனைவரும் இன்னும் நெடுந்தூரம் பயணப்பட வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. விரைவில் உங்களை திரையில் சந்திக்கிறோம் நன்றி,” என்றார்.
இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசுகையில்,
“என் அப்பா அம்மாவுக்கு நன்றி. என் மனைவிக்கு மிக்கக நன்றி. அவர்கள் சப்போர்ட்டில் தான் நான் இங்கு இருக்கிறேன். ஸ்போர்ட்ஸில் லவ் ஆல் சொல்லி துவங்குவது போல்தான் இந்தப் படத்தைத் துவங்கியுள்ளேன். அன்பு தான் இந்தப்படத்தின் அடிப்படை. இந்தப் படத்தில் ஹரி மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். கண்டிப்பாக இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். இந்தப் படம் கல்யாணத்திற்குப் பிறகான காதலைச் சொல்லும் படம். மெச்சூரிட்டியைப் புரிந்து கௌஷிக் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர், ஹெரோஷினி இருவரும் கண்டிப்பாக பாராட்டைப் பெறுவார்கள். தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி,” என்றார்.
நடிகர் கௌஷிக் பேசுகையில்,
“இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. சின்ன வயதிலிருந்தே எனக்கு பொழுதுபோக்குத் துறை மீது அதிகம் விருப்பம் இருந்தது. என் குடும்பம் எனக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார்கள், அவர்களுக்கு நன்றி. இயக்குநரின் 15 வருட கனவு இந்தப்படம். இந்தக்கனவை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளோம். உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி,” என்றார்.
‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்கிறார்.
இத் திரைப்படத்தைத் தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.