மீண்டும் வசூலில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது ‘கில்லி’ திரைப்படம்.
2004-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’. விஜய்யின் திரையுலக வாழ்வில் அமோக வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று ‘கில்லி’. சுமார் 20 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
வசனங்கள், காட்சியமைப்புகள், பாடல்கள் என பெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்பதால் தமிழகத்தில் சுமார் 350 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் நாளே பல்வேறு திரையரங்குகளில் அனைத்து காட்சிகளுமே அரங்குகள் நிறைந்தன. இதனால் முதல் நாள் வசூலே பல கோடிகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அது போலவே, ‘கில்லி’ மறு வெளியீட்டில் முதல் நாளில் சுமார் 10 கோடிக்கு நிகராக வசூல் செய்து மாபெரும் சாதனை நிகழ்த்தி இருக்கிறது. மேலும், பல்வேறு திரையரங்குகளின் எக்ஸ் தளத்தில் 2024-ம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்று வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது.
கோடை விடுமுறை என்பதால் வரும் நாட்களில் உள்ள வசூலை வைத்து, மேலும் வசூல் சாதனையை படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.