தமிழ்நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் ரஜினிகாந்த் என நீண்ட காலமாகவே சொல்லி வருகிறார்கள். ஆனால், அவரை விட நடிகர் விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதுதான் சமீபத்திய தகவல்.
இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் யார் தெரியுமா ?, ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்தவர்.
பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிகை கடந்த வருடம் ஜுன் 2019 முதல் மே 2020 வரையில் அதிகமாக சம்பாதித்துள்ள பிரபலங்களின் டாப் 100 பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் அக்ஷய் குமார் 48.5 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய மதிப்பில் 366 கோடி ரூபாய் சம்பாதித்து 52வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் 65 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது 466 கோடி ரூபாய் சம்பாதித்து 33வது இடத்தில் இருந்தவருக்கு இந்த வருடம் பின்னடைவுதான்.
ஹாலிவுட் பிரபலங்களான வில் ஸ்மித் (69வது இடம்), ஜாக்கி சான் (80), ஏஞ்லினா ஜோலி (99), ஆகியோரை அக்ஷய்குமார் பின்னுக்குத் தள்ளி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்ஷய்குமார் கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் ‘கேசரி, மிஷன் மங்கள், ஹவுஸ்புல் 4, குட் நியூஸ்’ ஆகிய படங்கள் வெளிவந்தன.
இந்த வருடத்தில் இன்னும் எந்தப் படமும் வெளியாகவில்லை. தற்போது, “லட்சுமி பாம், பிரித்விராஜ், சூர்யவன்ஷி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.