எதற்கும் துணிந்தவன் – பாமக, வன்னியர் சங்கம் மிரட்டலுக்கு ‘தமுஎகச’ கண்டம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை மறுதினம் மார்ச் 10ம் தேதி ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த சிலர் படத்தைத் திரையிடக் கூடாதென திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு…

“திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் 10.03.2022ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தை  திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டிவருவதற்கு தமுஎகச கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. 
 
2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்துவிட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தவொரு படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த மிரட்டலின் தொடர்ச்சியில்தான் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாதென அக்கட்சியினரும் வன்னிய சங்கத்தினரும் மிரட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 
 
இப்படிக்கு,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொ)  

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

08.03.2022

Read Previous

‘சர்தார்’ படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் கார்த்தி

Read Next

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்