முதல் படம் வெற்றியடைந்தாலும், தனது அடுத்தப் படத்துக்கு நீண்ட காலமாவதால் சோகமாகியுள்ளார் சிபி சக்கரவர்த்தி.
’டான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தியின் அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.
‘டான்’ படத்தைப் பார்த்துப் பாராட்டினார் ரஜினி. அப்போது ரஜினிக்காக கதை ஒன்றை தயாரித்துக் கூறினார் சிபி சக்கரவர்த்தி. அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்தாலும், படத்திற்கு பெரிய பொருட்செலவு தேவை என்பதால் மிகவும் தயங்கி, வேண்டாம் என்று கூறிவிட்டார். இதற்கே பல மாதங்கள் ஆனது.
அதற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் படம் என்ற பேச்சு நிலவியது. ஆனால், சிவகார்த்திகேயனிடம் தேதிகள் இல்லை என்பதால் அதுவும் தள்ளிப்போனது.
சில மாதங்களுக்கு முன்பு நானியிடம் கதையொன்றை கூறினார். அது அவருக்கு மிகவும் பிடித்துவிடவே, உடனடியாக தொடங்கிவிடலாம் என்றெல்லாம் முடிவெடுத்தார். ஆனால், தற்போது அந்தப் படமும் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் ‘யு டர்ன்’ அடித்து, மீண்டும் தமிழ்த் திரையுலக நாயகர்களுக்கே கதையைக் கூற ஆரம்பித்துள்ளார் சிபி சக்கரவர்த்தி.