தாமு உடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்து பேசியுள்ளார் வெங்கடேஷ் பட்.
விஜய் தொலைக்காட்சியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். தற்போது இதன் 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியை கடந்த 4 சீசனாக தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகிவிட்டது. இதனால் புதிய நிறுவனமொன்று தற்போதைய நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது மீடியா மேசன்ஸ் நிறுவனம். இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் நண்பர்களாகவும், பிரபலமானவர்களாகவும் செஃப் தாமு – வெங்கடேஷ் கூட்டணி வலம் வந்தது.
தற்போது நடைபெற்றுள்ள பிரிவால் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தாமுவும், ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டும் பங்கேற்றுள்ளனர். இந்தப் பிரிவு குறித்து வெங்கடேஷ் பட் பேட்டியொன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“என்னுடன் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி வருகிறேன் என்றார். அதனால் வீடியோ பதிவிட்டேன். அவரும் ஒரு வீடியோ பதிவிட்டார். விஜய் டிவி அவரைத் தொடர்புக் கொண்டு பேசினார்கள். அவருக்கு பிடித்திருந்த காரணத்தினால் அவர் அங்கேயே தங்கிவிட்டார்.
முதலில் நீ எங்கு இருக்கிறாராயோ அங்கேயே நானும் இருக்கிறேன் என்று தான் சொன்னார். என்னிடம் விஜய் தொலைக்காட்சி பேசியது போலவே, அவரிடமும் பேசியிருக்கிறார்கள். அவருக்கு ஏற்றார் போல் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரிடம் பேசும் வாய்ப்பு இன்னும் எனக்கு அமையவில்லை”
இவ்வாறு வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.