தின்க் ஸ்டுடியோஸ் மற்றும் த ஷோ பியூப்புள் இணைந்து வழங்க, சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கேப்டன்’.
‘டெடி’ படத்திற்குப் பிறகு சக்தி சௌந்தர்ராஜன், ஆர்யா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் இது. இப்படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 8ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் யுவா பேசுகையில்,
இயக்குனர் சக்தி எப்பொழுதும் ஒரு புது வித ஐடியாவுடன் தான் வருவார். அவரின் கற்பனை பிரமிப்பாக இருக்கும். ரசிகர்களுக்கு பிரமிப்பைத் தரும் வண்ணம், சரியான திட்டமிடலுடன் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.
படத் தொகுப்பாளர் பிரதீப் பேசுகையில்,
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களங்களைக் கொடுக்கும் ஒரு இயக்குனரிடம் பணிபுரிவது, ஒரு அரிய வாய்ப்பு. அத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. இயக்குனருக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.
இசையமைப்பாளர் இமான் பேசுகையில்,
இந்தப் படத்தில் ஆர்யா கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்கக் கூடிய கதைக்களத்தைத் தான் இயக்குனர் சக்தி கொண்டு வருவார். அது மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம். இயக்குனர் உடைய தெளிவான சிந்தனை தான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்தப் படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் என் நன்றிகள்.
ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில்,
இந்தப் படம் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இந்த படத்தில் ஒரு ஆழமான காதல் கதை இருக்கிறது. இயக்குனர் சக்தி உடைய கடின உழைப்பு, படத்தை சிறப்பாக மாற்றி இருக்கிறது. நடிகர் ஆர்யா மிகுந்த உறுதுணையாக இருந்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.
ஆர்யா பேசுகையில்,
நாங்கள் இந்தக் கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும் போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தார். இயக்குனர் சக்தி உடைய சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்த படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம். ஒரு பிரம்மாமண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இமான் சார் இந்த படத்தின் முதுகெலும்பு என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. நன்றி.
இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் பேசுகையில்,
கேப்டன் படம், நான் செய்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம். படம் உருவாக ஆர்யாவும், தயாரிப்பாளர் ஸ்வரூப்பும் தான் காரணம். இதுபோன்ற படங்களை நம் ஊரில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் படம் உருவாவதற்கு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந்த படம் என் மனதிற்கு நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில்,
தின்க் ஸ்டுடியோஸ் நிறுவன முதல் படைப்பே கேப்டன் என்ற பெயரில் வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தை நேர்த்தியாக உருவாக்குவதில் சிறந்த இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன். அவருடைய எண்ணத்தை இமான் இசையாக்கி இருக்கிறார். நடிகர் ஆர்யா சிறப்பான நடிகர். அவர் திரைப்படத்தை வெளியிடுவதிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி பேசுகையில்,
கேப்டன் படத்தின் இசையும் டிரைலரும் பான் இந்தியா திரைப்படத்திற்கான அம்சங்கள் அனைத்தும் நிறைந்து இருப்பதை நிரூபிக்கிறது. இந்தப் படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமானவர் ஆர்யா. ஒரு வெற்றிக் கூட்டணி மீண்டும் படம் பண்ணியுள்ளனர். படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
நடிகர் சந்தானம் பேசுகையில்,
ஆர்யாவுடன் என்னுடைய நட்பு, மிகவும் நெருக்கமான ஒன்று. ஆர்யாவின் எந்தத் திரைப்படமாக இருந்தாலும், அதற்கு என் அன்பு இருக்கும். இது ஒரு ஏலியன் படம், இந்த புதுவிதமான கற்பனைக்கே எனது வாழ்த்துகள். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும்.
மேலும் பல திரைப்பட பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தினர்.