‘இந்தியன் 2’ படத்தின் விமர்சனம் குறித்து, விமர்சகர்களை கடுமையாக சாடியிருக்கிறார் பாபி சிம்ஹா.
ஷங்கர் இயக்கத்தில் கமல், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தினை விமர்சகர்கள் கடுமையாக சாடினார்கள். இதனால் படத்தின் வசூல் தொடர்ச்சியாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது.
இதனிடையே ‘இந்தியன் 2’ குறித்து அளித்த பேட்டியில், விமர்சகர்களை கடுமையாக சாடியிருக்கிறார் பாபி சிம்ஹா. அதில் அவர் கூறியிருப்பதாவது:
“அனைவருமே அறிவாளிகளாக நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு விஷயம் நன்றாக இருக்கிறது என்றால், நல்லாயிருக்கிறது என சொன்னால் நம்மை முட்டாளாக நினைத்துவிடுவார்களோ என யோசிக்கிறார்கள். இதனால் ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவாளிகளைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. மக்களுக்கு படம் பிடித்திருக்கிறதா என்றால், கூட்டத்தைப் பார்த்தால் தெரியும். நமக்கு அவர்கள் தான் தேவை, அறிவாளிகள் தேவையில்லை. அறிவாளிகள் அவர்களுடைய அறிவை வைத்து படம் எடுக்கட்டும்”
இவ்வாறு பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.
தமிழில் மட்டுமே ‘இந்தியன் 2’ படத்தின் வசூல் குறிப்பிடும் போது இருப்பதாகவும், இதர மொழிகளில் படத்தின் வசூல் குறிப்பிடும்படி இல்லை என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.