அட்லி இயக்கவுள்ள புதிய படத்தில் கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணி இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இது சுமூகமாக முடியவில்லை. இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், அட்லியின் முடிவில் படத்தினைக் கொடுத்தது.
உடனடியாக சல்மான்கானை சந்தித்து கதையொன்றை கூறினார் அட்லி. அவரும் கதையைக் கேட்டுவிட்டு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அக்கதையில் இன்னொரு கதாபாத்திரத்துக்கு கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார்.
அவருக்கு முதற்கட்டமாக கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் – சல்மான்கான் இருவருமே முழுமையான திரைக்கதை வடிவத்துடன் கூடிய கதையினை ஆகஸ்ட் மாதம் இறுதியில் கேட்க இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்தே இந்தக் கூட்டணி இணைவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
கமல்ஹாசன் – சல்மான்கான் இருவருமே நாயகர்களாக நடிக்க இருந்தாலும், வில்லனாக வேறொரு நாயகனை நடிக்கவைத்து மாபெரும் மல்டி ஸ்டாரர் படமாக இதனை உருவாக்க அட்லி திட்டமிட்டு இருக்கிறார். அவருடைய கதைக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பாகவே ஒப்புதல் வழங்கிவிட்டது.