அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
’ஜவான்’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனை வைத்து அவருடைய அடுத்த படத்தினை தயாரிக்க பலரும் போட்டியிட்டார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
என்னவென்றால், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இதற்கான கதை விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டணி படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதன் சம்பள பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்தப் பிரச்சினையால் அதிகாரபூர்வ அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
தனக்கு 100 கோடி சம்பளம் வேண்டும் என்ற பிடியில் இருந்து அட்லி இறங்கி வரவே இல்லையாம். இருவருக்கும் சம்பளமாக மட்டுமே 250 கோடி வரை கொடுக்கப்பட்டால், எப்படி தயாரித்து லாபம் சம்பாதிப்பது என்று தயாரிப்பு நிறுவனம் தயங்குகிறதாம்.
இதனால், அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணி படம் கைவிடப்படும் சூழல் உருவாகி இருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அட்லி – அல்லு அர்ஜுன் தரப்பும் எந்தவொரு பதிலும் கூறாமல் இருக்கிறது.