‘தனி ஒருவன் 2’ படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் அபிஷேக் பச்சன்.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சுவாமி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. இந்தப் படம் மூலமாகவே, முன்னணி நாயகர்களில் ஒருவராக ஜெயம் ரவி உருவானார்.
தற்போது ‘தனி ஒருவன் 2’ படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டார் மோகன் ராஜா. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தினை முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முழுமையாக கவனம் செலுத்த, ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு சமயத்தில் வேறு எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளார் ஜெயம் ரவி,
மேலும், இதில் ஜெயம் ரவி உடன் வரும் வில்லன் கதாபாத்திரம் என்பது மிகவும் முக்கியம். இதில் நடிப்பதற்கு அபிஷேக் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை என்றாலும், கதை மிகவும் பிடித்திருப்பதால் விரைவில் கையெழுத்திடுவார் என்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.