முடிவுக்கு வந்த இளையராஜா – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழு பஞ்சாயத்து

இளையராஜா மற்றும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினருக்கு இடையேயான பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது.

சிதம்பரம் இயக்கத்தில் செளபின் ஷாகீர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்தியா முழுக்க இந்தப் படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. இதன் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போட காதலன்’ பாடலும், அதை உபயோகப்படுத்திய விதமும் அமோக வரவேற்பினை பெற்றது.

இந்தப் படக்குழுவினரை தமிழகத்தில் பல முன்னணி நடிகர்கள் அழைத்து பாராட்டினார்கள். இதே சமயத்தில் தன்னுடைய அனுமதியின்றி பாடலை உபயோகப்படுத்தியதாக படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. மேலும், 2 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இது பெரும் சர்ச்சையாக உருவானது. ஆனால், படக்குழுவினரோ நாங்கள் இசையுரிமை நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டதாக கூறினார்கள். இந்த வழக்கு குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் உலாவந்தது. இறுதியில் இளையராஜா – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினர் சமரசம் செய்து கொண்டுள்ளனர்.

எப்படியென்றால் பணம் குறித்த பேச்சுவார்த்தையில் 60 லட்சத்துக்கு இளையராஜா சமரசம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கினை வாபஸ் பெற்றுள்ளார்.

Read Previous

‘விஜய் 69’ அப்டேட்: மமிதா பைஜு ஒப்பந்தம்

Read Next

சஸ்பென்சும் கேள்விகளும் நிறைந்த ‘அந்தகன்’