துரை.செந்தில்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.
’எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’ மற்றும் ‘பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர் துரை.செந்தில்குமார். தற்போது சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கருடன்’ படத்தினை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
‘கருடன்’ படத்தினைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. ஆனால், இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணன் படத்திற்கு முன்பாக லாரன்ஸ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் துரை.செந்தில்குமார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்க படமொன்று அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தினை தான் துரை.செந்தில்குமார் இயக்கவுள்ளார்.
இது முன்பே அறிவிக்கப்பட்ட ‘அதிகாரம்’ படம் தான். சமீபத்தில் தான் இந்தப் படத்தின் முழுக்கதையினையும் கேட்டதாக வெற்றிமாறன் உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தோடு அறிவித்திருந்தார் லாரன்ஸ். இப்போது அந்தப் படத்தினை இயக்கவுள்ளார் துரை.செந்தில்குமார். அதனை முடித்துவிட்டு தான் லெஜண்ட் சரவணன் படத்தினை இயக்கவுள்ளார்.