‘வேட்டையன்’ படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதால், தயாரிப்பு நிறுவனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்து வரும் படத்தினை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதன் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனிடையே தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து ஞானவேலுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. என்னவென்றால், திட்டமிட்டதை விட படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகி கொண்டே இருப்பதால் விரைவில் முடிக்க திட்டமிடுங்கள் என்று கூறியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
மேலும், லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் ரஜினியும் விரைவில் படப்பிடிப்பை முடிக்க கூறியிருக்கிறார். அக்டோபரில் வெளியீடு என்று போஸ்டர் வெளியீட்டிற்கு கூட இது தான் காரணம் என்கிறார்கள். படத்தின் வெளியீடு திட்டமிட்டுவிட்டால், விரைவில் படப்பிடிப்பினை முடித்து இறுதிகட்டப் பணிகளை தொடங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
’லால் சலாம்’ படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமம் இன்னும் விற்பனையாகவில்லை. ஆகையால் அதில் ஏற்பட்ட நஷ்டத்தினை ‘வேட்டையன்’ படத்தின் மூலமாக ஈடுகட்ட முடிவு செய்துள்ளது லைகா நிறுவனம்.