பல வித்தியாசமான படங்களைக் கொடுத்த சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஸ்டுடியோ க்ரீன் – கே.ஈ.ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்து வரும் படம் ‘இன்று நேற்று நாளை’.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்க, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். விஷ்ணு விஷால், ‘அமர காவியம்’ மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படம் ஒரு புதுமையான முயற்சி என்கிறார் படத்தின் இயக்குனர் ரவிக்குமார்.
“இந்த படத்தோட கதையை முதன் முதலா தயாரிப்பாளர் சி.வி.குமார் சார் கிட்ட சொல்லும் போது, நீ சொல்றத அப்படியே ரசிகர்களுக்குப் புரிய வச்சிட முடியுமான்னு கேட்டாரு. முடியும்னு சொன்னேன், ஏன்னா இந்தப் படத்தோட திரைக்கதை அப்படிப்பட்ட ஒரு திரைக்கதை. ரசிகர்களுக்கும் அது புரியற மாதிரி அவங்கள என் பக்கம் இழுக்க முடியும்னு நான் கண்டிப்பா நம்பறேன்.
படத்தோட கதை என்னன்னு இப்பவே சொல்லிட்டால் மிகப் பெரிய சுவாரசியம் இருக்காது. ஒரு பெரிய விஷயம் படத்தோட நாயகனுக்குக் கிடைக்குது, அதை வச்சிக்கிட்டு அவன் என்னலாம் பண்றாங்கறதுதான் படத்தோட ஒரு வரிக் கதை.
அதை இன்று, நேற்று, நாளை என ஒரு வித்தியாசமான படைப்பா கொடுக்கப் போறோம். திரைக்கதையில அப்படி ஒரு விஷயம் வர்றதுனாலதான் படத்துக்கு அந்தப் பொருத்தமான பெயரையே வச்சோம். இந்த மாதிரி ஒரு யுக்தி இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல வந்ததில்லைன்னு சொல்லலாம். படத்துக்குப் பொருத்தமான நட்சத்திரங்கள் கூடுதல் பலம். நிச்சயம் இந்தப் படம் ஒரு புதுமையான முயற்சியா இருக்கும்,” என்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.