முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக் காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையைக் கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடை அளித்தார்.
16-05-1959 ஆம் ஆண்டு தென்னகமெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்னரே 10-05-1959 ஆம் நாளன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு ரசித்தனர். விழாவிற்கு தலைமை ஏற்றவர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சகோதரியும் நம் நாட்டின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் என்ற சிறப்பு பெற்ற விஜயலட்சுமி பண்டிட் ஆவார்.
1960 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்ப்படமாகவும், முதல் இந்தியப்படமாகவும், முதல் ஆசியத் திரைப்படமாகவும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திகழ்கிறது.
கெய்ரோவில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்த போது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று, நடிகர்திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப்பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும்.
தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்கக் காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச் சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.
தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், சாய் கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளி வரவுள்ளது.