ஜீ குழும சேனல்களில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி சரிகமப.
கடந்த பல சீசன்களாக தனக்கென தனி முத்திரையைப் பதித்த ஒரு நிகழ்ச்சி ‘சரிகமப’.
தமிழில் ஜீ தமிழ் டிவியில் ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கென்று தனி வரவேற்பு உண்டு. பல திறமைசாலி பாடகர்கள், பாடகிகளை அடையாளம் கண்டு அவர்களை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
ஜீ குழுமங்களில் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி 25 வருடங்களை நிறைவு செய்கிறது. அதன் கொண்டாட்டத்தை அனைத்து ஜீ குழும மாநில மொ சேனல்களுடன் இணைந்து இதுவரை பார்த்திருக்காத அளவிற்கு 25 மணி நேர தொடர் டிஜிட்டல் மியூசிக் நிகழ்வொன்றை நாளை மே 23ம் தேதி காலை 9 மணியிலிருந்து நடத்த உள்ளார்கள்.
அதில் 10 மாநிலங்களில் இருந்து 350க்கும் அதிகமான நேரடி இசை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஜீ தமிழ் சரிகமப இசைக் குழுவினர் பங்கு பெறும் நிகழ்வு 24ம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு இடம் பெற உள்ளது.
ஜீ நெட் வொர்க் சேனல்களின் அனைத்து பேஸ்புக் பக்கங்களிலும் ( https://www.facebook.com/ZeeTamizh) இந்த நேரடி ஒளிபரப்பு 23 மற்றும் 24ம் தேதி நடக்கிறது. ஜீ தமிழ் குழுவினர் பங்கேற்கும் நிகழ்வு 24ம் தேதி இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும்.
முன்னணி இசைக் கலைஞர்களான விஜய் பிரகாஷ், ஸ்ரீனிவாஸ், சுஜாதா, ஹரிச்சரண், ராகுல் நம்பியார், சக்திஸ்ரீ கோபாலன், ரஞ்சித், சரண்யா சீனிவாஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். மேலும் சரிகமப நிகழ்வின் டாப் போட்டியாளர்களான வர்ஷா, ரமணி அம்மாள், அஸ்லம், கமலேஷ், ஜஸ்கரண் சிங், விஷ்வ பிரசாத், ஸ்ரீநிதி, சுகன்யா, ஷர்மிலி, ஐஸ்வர்யா, ஆர்ய நந்தா, அருள் பிரகாசம், ஜனகன் ஆகியோரும் கலந்து கொண்டு பாட உள்ளார்கள்.
கொரானோ தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு பல விதங்களில் நிவாரணத்தை வழங்கி வரும் ‘கிவ் இந்தியா’ என்ற சமூக சேவை நிறுவனத்திற்கான நிவாரண உதவியாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.