‘வீரமே வாகை சூடும்’ குழுவினரின் வெற்றி நம்பிக்கை
15 Jan 2022
விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், து.ப. சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், டிம்பிள் ஹயாத்தி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் து.ப. சரவணன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் கவின் ராஜ், படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த், கலை இயக்குனர் மூர்த்தி, ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், தெலுங்கு வசனகர்த்தா ராஜேஷ், விஷால், டிம்பிள் ஹயாத்தி, ரவீணா ரவி, மாரிமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்து பேசுகையில்,
விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலின் அப்பா ஒருமுறை கை குலுக்கினார். 3 நாட்களுக்கு கை வலித்தது. அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படின்னா மகன் அடிச்சா எப்படி இருக்கும். விஷால் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார். இப்படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் சண்டை காட்சிகள் தூள் பறக்கும் அளவிற்கு அருமையாக இருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டின் போது ஊரடங்கு அனைத்தும் நிறைவு பெற்று அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு விஷால் சார் அவர்களுக்கு தனிப்பட்ட வேண்டுகோள். உங்கள் கல்யாணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். மேலும், இயக்குனரின் முதல் படம் அவருக்கு வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்.
ரவீனா ரவி பேசியதாவது,
இந்த படம் என் வாழ்க்கையுடன் ஒன்றி இருக்கிறது. நானும் அப்பாவும் தான் இப்படத்தின் கதையை கேட்டோம். அப்பா பெரிதும் தலையிட மாட்டார். ஆனால், அப்பா இந்த படத்தில் என்னை நடிக்க சொன்னார். கொரோனா காரணமாக அவர் இப்போது என்னுடன் இல்லை. அவரின் ஆசிர்வாதம் என்னுடன் எப்போதும் இருக்கும்.
தெலுங்கு மொழி வசனகர்த்தா ராஜேஷ் பேசியதாவது,
இந்த படத்திற்கு தெலுங்கு மொழியில் ‘சாமான்யடு' என்று பெயர். தற்போது, நடக்க கூடிய நடுத்தர குடும்பத்தின் பிரச்சனையை மையமாக கொண்ட படம். VFF என்னுடைய வீடு போன்றது. வசனம் எழுதுவது மட்டும் என் வேலை இல்லை. என்ன சொன்னாலும் செய்வேன். விஷாலுடன் கிட்டதட்ட 15-20 வருடம் பயணித்திருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா இசையில் புதுமை காட்டியுள்ளார். நான் யுவன் ஷங்கர் ராஜாவின் பெரிய ரசிகன். ரவீனா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையின் திருப்பு முனையே அவர் தான். அனைவரும் படத்தை பார்த்து விட்டு எங்களை பாராட்டுங்கள்.
டிம்பிள் ஹயாதி பேசுகையில்,
இது என்னுடைய முதல் முழு நீள தமிழ்ப் படம். வாய்ப்பளித்த இயக்குனர் சரவணன் சார் அவர்களுக்கு நன்றி. என்னுடைய நீண்ட நாள் கனவு நினைவேறியது போன்று இருக்கிறது. விஷால் சார் என்னுடைய இன்ஸ்பிரஷன். அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டாலும் பெரிதும் பொருட்படுத்த மாட்டார். மாரிமுத்து ஏற்கனவே ‘அட்ராங்கி ரே’ படத்தில் என் அப்பாவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் எனக்கு மாமனாராக நடித்துள்ளார். அனைவரும் படத்தை திரையரங்கில் பாருங்கள்.
இயக்குனர் து.ப.சரவணன் பேசும்போது,
அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள், இந்த கதை வெற்றியடையும் என ஊக்கமளித்தவர் கருந்தேள் ராஜேஷ். அதேபோல், இறுதி வரை துணையாக இருந்தவர் பொன் பார்த்திபன். இந்த வாய்ப்பு கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. இன்று நான் இங்கு நிற்பதற்கு காரணம் விஷால் சார் தான். இப்படத்தின் கதையை விஷால் சாரிடம் கூறிய பிறகு, யுவனிடம் சொல்லுங்கள் என்றார். பிறகு யுவன் சாரிடம் 30 நிமிடம் என்று தான் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், ஒன்றரை மணி நேரம் ஆனது. பிறகு விஷால் சார் என்னை அழைத்து, யுவன் கதை ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னார். அந்த பெயரைக் காப்பாற்று என்றார். அது இந்த நிமிடம் வரை என் மனதில் அப்படியே இருக்கிறது. அதை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது,
விஷாலுடன் நிறைய படங்கள் பணியாற்றியிருக்கிறேன். பல படங்கள் வெற்றியடைந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும்.
நடிகர் விஷால் பேசும்போது,
கொரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது. து.ப. சரவணனின் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும் படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரைக் கூப்பிட்டுப் பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’.
இப்படத்தில் கதையை விட திரைக்கதை தான் எனக்குப் பிடித்தது. புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. புது இயக்குனரிடம் நல்ல கதையைக் கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன். இப் படத்திருக்கும் அதேபோல் யுவன் தான் மியூசிக்.
நாயகி டிம்பிளை ஒரு விழாவில் எடுத்த ஸ்டில்லை பார்த்து ஒப்பந்தம் செய்தோம். அவரை இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். தமிழில் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை. நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.
ரவீனாவிற்கு என்னைப்போல் படப்பிடிப்பில் யாரும் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள், திறமையாக நடித்திருந்தார். மாரிமுத்து எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் அழ வைத்து விடுவார். மாரிமுத்து என்னிடம், நீ சண்டையை விடவே மாட்டியா ? என்பார். அதை எதிரி தான் முடிவு செய்யணும் என்று கூறுவேன். இது தான் படத்தின் கரு.
வாசுகி என்னுடைய நெருங்கிய தோழி. என் பெற்றோர், மேலாளரை விட நான் படப்பிடிப்பிற்கு சென்றேனா இல்லையா என்று வாசுகி தான் முதலில் விசாரிப்பார். என்னைப் பொறுத்தவரை இந்த விழா நடக்கும் கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை, கோவில். என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் என்று தான் கூறுவேன்.
Tags: veerame vagai soodum, vishal, thu pa saravanan, yuvanshankar raja, timple hayathi