‘என் வழி தனி வழி’ பாடல்கள் புதிய முறையில் வெளியீடு…

en vazhi thani vazhi audio launch

மக்கள் பாசறை வழங்கும் ஆர்.கே.நடிக்கும் படம் ‘என்வழி தனி வழி’ இப்படத்தை  ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் வைரமுத்து, இளையகம்பன்.

படத்தின் இசையை  விஜய் சம்பிரதாயமான முறையில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவை புது தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டன. . இந்த முறையில் இந்தியாவிலேயே முதல் முயற்சி ‘என் வழி தனி வழி’ படம்தான்.

விஜய் ஆடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆர்.கே.வி ஸ்டுடியோவில் படத்தின் அறிமுகவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் நாயகன்  நடிகர் ஆர்கே பேசும் போது ” இந்த ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டை வேறு மாதிரி புதிய வழியில் செய்ய ஆசைப்பட்டேன். வருங்காலம் இனி தொழில்நுட்பத்தின் கையில்தான். வருங்காலம் இனி மீடியா கையில்தான். எனவேதான் இம் முயற்சியை செய்துள்ளோம்.இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவற்றை ரசிகர்கள் எவரும் இருந்த இடத்திலிருந்து பார்க்கும் கேட்கும் வகையில் புது தொழில்நுட்பத்தில் வெளியிட்டுள்ளோம். இதன்படி படத்தின் விளம்பரத்தையோ,போஸ்டரையோ  மொபைல் போனில் க்ளிக் செய்தால் போதும் பாடல்களைக் கேட்கலாம், ட்ரெய்லரைப் பார்க்கலாம்.

இனி யாருடைய விவரம் தேவை என்றாலும் அவர் முகத்தை மொபைலில் ஒரு போட்டோ எடுத்தால் போதும். ஒரு புகைப்படத்தை வைத்தே எல்லா விவரமும் கிடைக்கும், இதுதான் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்.

இந்த ஆடியோ வெளியீட்டை விமானத்தில் பறந்த படியே வெளியிட எண்ணினேன். ஆனால் அதையும் தாண்டி இதைக் கொண்டு சேர்க்கும் மீடியா முன் அறிமுகம் செய்யவே இங்கு வருவதாக முடிவு செய்தேன்.

இதை இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகம் செய்ததற் காக பெருமைப் படுகிறேன். ‘என் வழி தனி வழி’ இது ஒரு போலீஸ் அதிகாரி பற்றிய விறுவிறு கதை.இப்படம் ஜனவரி 23ல் வெளியாகிறது. படத்தில் பாடல்களுக்கு எனக்கு ஆட வரவில்லை, சுமாராகத்தான் ஆடியுள்ளேன்.  ஆட ஆட அது சரியாக வருமென்று நம்புகிறேன்.

2015–ல் மூன்று படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதே படக்குழுவைக் கொண்டுஅடுத்து ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்கிற  படம் எடுக்க இருக்கிறோம். பிப்ரவரியில் படப்பிடிப்புக்குச் செல்கிறோம். இந்த’என் வழி தனி வழி’ படம் எங்கள் முந்தைய ‘எல்லாம் அவன் செயல்’ படத்தைப் போல பத்து மடங்கு நன்றாக வருமென்று நினைக்கிறேன், ” என ஆர்கே பேசினார்.

கதாநாயகி பூனம் கவுர் பேசும் போது “இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாதது. என் ஹீரோ, என் டைரக்டர், என்னுடன் நடித்தவர்கள் என்னுடன் நட்புடன் பழகினார்கள் , நன்றி” என்றார்

தன் படம் பேசட்டும் என்ற கருதியோ என்னவோ இந்தப் படத்தின் இயக்குனரான ஷாஜி கைலாஸ்  ”வணக்கம் நன்றி”என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

“எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். நடிக்கும் எங்களுக்கே சிரிக்கும் படியான காமெடி இப்படத்தில் இருந்தது. டைரக்டர் கோபப்படாமல் வேலை வாங்கினார்,” என்றார் நடிகர்  சிங்கமுத்து..

இயக்குநர் டி.பி.கஜேந்திரன்,” விறுவிறுப்பு, சுறுசுறுப்பு, பரபரப்பு மூன்றும் உள்ள இயக்குநர். ஈடுபாடும் அர்ப்பணிப்பும் உள்ள நடிகர் ஆர்.கே. நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும் “என்றார்.

இயக்குநர் செந்தில் நாதன் பேசும்போது “படம் நிஜமாகவே நன்றாக வந்திருக்கிறது. 2 நாளில் எடுக்க வேண்டிய காட்சிகளை அரை நாளில் எடுத்த இயக்குநரைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். “என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் ஞானவேல் பேசும்போது ”நடிகர் ஆர்கேவையும் ஷாஜிகைலாஸையும் எனக்கு10 ஆண்டுகளாகத் தெரியும். பலதொழில்கள் இருந்தாலும் ஆர்.கே சினிமா மீது ஆர்வம் கொண்டவர்,”என்று கூறி வாழ்த்தினார்.

வசனகர்த்தா பிரபாகர் பேசும்போது ‘எல்லாம் அவன் செயல்’ எனக்கு பெயர் பெற்றுத் தந்த படம். இந்தப் படத்தில் பல பன்ச்கள் நிறைந்திருக்கிறது. இது ஒரு காவல்துறை அதிகாரி பற்றிய படம். அப்படிபட்ட நாயகனாக ஆர்.கே நடித்து இருந்தாலும், பூனம்கவுர், மீனாட்சி திட்சித், ராதாரவி, ‘ஆஹா’ ராஜீவ் கிருஷ்ணா, ஆசிஷ் வித்யார்த்தி, ரோஜா, சீதா, தலைவாசல் விஜய், அஜய்ரத்னம், இளவரசு, கராத்தே ராஜா, பொன்னம்பலம் என நடிகர் சங்கமே சேர்ந்தது போல் பலர் நடித்துள்ளனர். நான் 35 படங்களில் பணியாற்றியிருந்தாலும் ஷாஜி கைலாஸ் என் இயக்குநர் என்று சொல்லும் படியான இயக்குநர்”.என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவாளர் ராஜரத்னம்,  ஆகியோரும் பேசினார்கள்.

Read Previous

வேந்தர் டிவியில் குஷ்பு வழங்கும் ‘நினைத்தாலே இனிக்கும்’…

Read Next

‘வானவில் வாழ்க்கை’ – இசை மயமான படம்…