‘அலைகள் ஓய்வதில்லை’ முதல் ‘பம்பாய்’ வரை பல படங்களில் மதம் கடந்த காதல் கதைகள் காட்டப்பட்டு வெற்றி பெற்றுள்ளன.
அந்த வரிசையில் மீண்டும் இடம் பெறும் வகையில் உருவாகிவரும் படம்தான் ‘மீண்டும் ஒரு காதல் கதை’.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் கதையைத்தான், ‘மீண்டும் ஒரு காதல் கதை’யாக தமிழில் எடுக்க இருக்கிறார்கள். இப்படத்தை மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார். இவர் தனுஷை வைத்து ‘யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன்’ படங்களை இயக்கியவர்.
நடுத்தர வர்க்கத்து இந்துப் பையன் வசதியான முஸ்லிம் பெண்ணை விரும்புகிறான். அவர்களுக்கிடையே அரும்பும் காதல் , இருவரும் ஒன்று சேர வரும் எதிர்ப்புகள், தடைகள் பற்றியது தான் கதை. ஆனால் கவிதை போல அழகாகவும் கலகலப்பு குறையாமல் கவனமாகவும் கதை சொல்லும் படம் இது.
புதுமுகம் கௌதம் நாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் ‘தட்டத்தின் மறையத்து’ படத்தில் நடித்த இஷா தல்வார்தான் தமிழிலும் நாயகியாக நடிக்கிறார். நாசர், மனோஜ் கே. ஜெயன், தலைவாசல் விஜய், சிங்கமுத்து, சிங்கம் புலி, வனிதா, சங்கிலி முருகன், வெங்கி, அர்ஜுன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படத்தின் ஐந்து பாடல்களை நா.முத்துகுமார், தாமரை, அருண் ராஜா எழுதுகிறார்கள். கன்னியாகுமாரியில்தான் கதை நடக்கிறது என்றாலும் சென்னை, கோவை, கேரளா, தலச்சேரி போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தைத் பிளாக் டிக்கெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு படத்தை வாங்கி வெளியிடுகிறார்.