2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த பெரு வெள்ளம் காரணமாக சென்னை மக்களுக்கிடையே மனித நேயம் தழைத்தோங்கியது.
மதம், இனம், மொழி என எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர். அந்த உதவி அத்துடன் நின்று விடாமல் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் விக்ரம் ‘ஸ்பிரிட் ஆப் சென்னை’ என்ற இசை குறும்படம் ஒன்றை நாளை வெளியிடுகிறார்.
அது பற்றிய அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
“மழை வெள்ளம் முடிந்த பின் ஒரு நாள் சென்று கொண்டிருந்த போது ஒருவர் என் மீது லேசாக மோதி விட்டார். அப்போது அவர் என்னைப் பார்த்த ஒரு பார்வைதான் இப்படி ஒரு இசை குறும்படத்தை வெளியிடத் தூண்டியது. இதற்காக வந்து ஒத்துழைத்த அனைத்து மொழி நடிகர்களுக்கும் நன்றி,” என்றார் விக்ரம்.
இந்த ‘ஸ்பிரிட் ஆப் சென்னை’ இசை குறும்படம் பற்றி அவர் மேலும் கூறுகையில்,
உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு, குடிக்க தண்ணீர் இது போல எதுவுமே கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டது சென்னை.
சில இடங்களில் உயிரைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த மழை. இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல,மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்துனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள்.
வெள்ளத்தினைத் தாண்டி,உலகில் இருக்கும் அத்தனை பேரின் கவனத்தினை ஈர்த்தது. வெள்ளத்திற்கு எதிராக இறங்கி,என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள்.
சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது. உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த இயற்கைப் பேரிடர் தானா? என்ற கேள்வி என்னுள் வந்தது.
எந்தவித வெறுப்பும், தயக்கமுமின்றி, ஒற்றுமையாகக் களமிறங்கிய, அந்த ஆயிரக்கணக்கான நல்உள்ளங்களை என் கேள்விக்கு பதிலாக, நான் பார்த்தேன்.
மனிதநேயத்தின் மீதான மதிப்பு என்னுள் இப்போது இன்னும் அதிகமானது. என்னை நான் இன்னும் சற்று மெருகேற்றிக் கொள்ளக் காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார் விக்ரம்.