‘நீட்’ தேர்வு அமல்படுத்தப்பட்டதால் + 2 தேர்வில் 1176 மதிப் பெண்கள் பெற்றிருந்தும் டாக்டருக்குப் படிக்க முடியாததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய எதிர்பாராத மறைவு தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவர்களுடைய இரங்கலையும், நீட் தேர்விற்கு எதிரான கருத்துக்களையும் அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார்கள்.
அனிதாவின் மறைவு திரையுலகத்தினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், ராகவா லாரன்ஸ், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் அவர்களது இரங்கலைத் தெரிவித்துள்ளார்கள்.
கமல்ஹாசன்
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம், பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். சாதி, கட்சி பாகுபாடின்றி நியாயத்திற்காக அனைவரும் போராட வேண்டும். நீட் விவகாரத்தில் இன்று வருகிறது நல்ல செய்தி என கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். கனவுடன் வாழ்ந்த பெண்ணை, மண்ணோடு மண்ணாக்கி விட்டோம். அனிதா எனக்கும் மகள் தான். ஒரு நல்ல டாக்டரை இழந்து விட்டோம்.
ரஜினிகாந்த்
அனிதாவிற்கு நிகழ்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அனிதா பட்ட வலியையும், வேதனையும் என்னால் உணர முடிகிறது. அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்.
ஜி.வி. பிரகாஷ்குமார்
கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா – இன்று இல்லை..நீட் தேர்வால் உயிரிழந்த அனிதான் மரணம், அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை.
ராகவா லாரன்ஸ்
அனிதாவின் மரணச் செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு துயரமான முடிவை அவர் எடுக்க அவருக்கு ஏற்பட்ட சூழ்நிலையைப் பற்றி யோசிக்கவே வலிக்கிறது.
சிவகார்த்திகேயன்
இந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது…என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.
விவேக்
உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்?. இதற்கு மேல் என்ன படிக்க ? ஒரு அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது.
ஆர்ஜே. பாலாஜி
வெட்கமற்ற, தகுதியற்ற, ஊழல் தலைவர்களின் பொறுப்பற்ற செயல்களால் ஏழை மாணவர்கள் அவர்கள் கனவுகளைத் தியாகம் செய்வது மட்டுமல்லாமல் இப்போது வாழ்க்கையயைம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.
சூரி
படிப்பை இழந்தது நீயல்ல… இந்த தேசம் தான் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது. கண்ணீர் அஞ்சலி தங்கையே…
இயக்குனர் சேரன்
ஏழைகளின் சார்பில் கண்ணுக்குள் ஒளித்து வைத்திருந்த ஆயிரமாயிரம் கனவுகளை அரை நொடியில் அழித்தாயோ அனிதா…செங்கொடி வழி நீயோ.
இயக்குனர் தங்கர்பச்சான்
*அனிதா கேட்கிறார்!*
மாணவர்களின் குற்றமா ?
ஆட்சியாளர்களின் குற்றமா ?
தண்டிக்க வேண்டியது ஆட்சியாளர்களையா ?
மாணவர்களையா ?
நீதியைத் தரப் போவது யார்?
இயக்குனர் மோகன் ராஜா
இன்று கருப்பு நாள். அவர் உயிரோடு இருந்திருந்தால் பலரின் உடல்நலத்தை சீராக்கியிருப்பார். இப்போது அவருடைய மரணம் பலரின் மன நோயை சீர் செய்யும்.
இயக்குனர் சீனு ராமசாமி
டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி.
இயக்குனர் பாண்டிராஜ்
Rip போடுற வயசா இது ? வேதனைப்பட வேண்டிய விசயம் இல்லை. வெக்கப்பட வேண்டிய விசயம். எப்போ கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு.
இயக்குனர் பா. ரஞ்சித்
ஒரு தலைமுறையின் பெருங்கனவை சிதைத்த சமுக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும்.
இயக்குனர் ராம்
நீட் ஒரு அரசபயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்.
பாடலாசிரியை தாமரை
பல உயிர்களை காப்பாற்றியிருக்க வேண்டிய சகோதரி, இன்று தன் உயிரை மாய்த்துக்கொண்டார். எவ்வளவு கனவுகள் நசுக்கப்பட்டிருக்கும்.
பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து
அடிப்படை உரிமைகளைக் கூட வீதிக்கு வந்து போராடித்தான் பெறவேண்டும் என்ற சூழலுக்கு பெயர் ஜனநாயகம் அல்ல. போர்க்களம்.
பாடலாசிரியர் விவேக்
மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவுடா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு ?.
—-
+ 2 படித்து அதிக மார்க் எடுத்தது போதாதா…அப்புறம் ஏன் பின்னர் மருத்துவம் சேர்வதற்கு நீட் என்ற ஒரு தகுதித் தேர்வு. அனிதாவின் தற்கொலை தமிழக மக்கள் மனதில் கடும் துயரத்தை எற்படுத்தியுள்ளது.